
தைத்திங்கள் முதல்நாள்
புத்தாண்டின் துவக்கம்!
தைப்பொங்கல் திருநாள்
நன்றிப் பெருவிழா!
பொங்கும் பொங்கலைப்
புதுமைப் பொங்கலென
பொங்கி மகிழ்வோம்!
பகிர்ந்து களிப்போம்!
நன்றி நவில்வோம்
நன்மை புரிந்தார்க்கு!
நன்றல்லது மறப்போம்!
நல்வாழ்வை நோக்கி!
செய்ந்நன்றி மறவாமல்
செய்ந்நன்றி தெரிவிக்க
சரியான காலமிது!
நன்றியைப் பகர்ந்திடுவோம்!
உலகுக்கு உணவளிக்க
உழைப்பைச் சிந்தும்
உன்னத உழவருக்கு
நன்றிசொல்வோம்!
உழவருக்கு உறுதுணையாய்
உறவாய் இருக்கும்
உழவுமாடுகளுக்கு நன்றி!
உழவுகருவிகளுக்கு நன்றி!
உழவுக்கு உயிர்கொடுக்கும்
உதயசூரியனுக்கு நன்றி!
உயிர்வாழ நீரளிக்கும்
மாமழைக்கும் நன்றி!
திராவிடத் தடயத்தை
சிந்துவில் கண்டெடுத்தும்
பாருக்கு உரைக்காமல்
மறைத்து வைத்திருந்த
உண்மையை வெளிக்கொணர்ந்து
நூற்றாண்டுவிழா காணும்
நிகழ்வின் நாயகனாம்
சர்ஜான்மார்ஷலுக்கு
நன்றிசொல்வோம்!
நல்லாட்சி நல்கி
நனிசிறந்த ஆட்சிதரும்
திராவிடத் தளபதிக்கும்
நெஞ்சார நன்றிசொல்வோம்!
பொங்கலிட வேண்டி
புத்தாடை உடுத்தி
புதுப்பானை வைத்து
புத்தரிசி கொண்டு
பாலொடு வெல்லமும்
பாங்குடனே கலந்து
பொங்கி வரும்போது
பொங்கலோ பொங்கலென
பொங்கும் இன்பத்தில்
மனதார நன்றியை
மாண்புடனே தெரிவிப்போம்!
மாண்பினைப் போற்றுவோம்!
பொங்கலோ பொங்கலென்று!
பொங்கலோ பொங்கல்!
புதுமைகள் மலர
பொங்கட்டும் பொங்கல்!
கோ.இமயவரம்பன்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments