Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-11


குறள் மொழி 18

18. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.

குறள் எண் : 314

குறள் மொழியின் பொருள் :

நம்மைக் காயப்படுத்தி, துன்பம் செய்தவர்க்கு நாம் தரும் தண்டனையானது, அத்துன்பம் தந்து தீங்கிழைத்தவரே வெட்கப்படும்படி அவருக்கு நாம் நன்மை செய்து, அத்துடன் அவர் நமக்கிழைத்த தீங்கு, நாம் செய்த நன்மை இரண்டையும் விட்டு விடுதலே ஆகும்.

நபிமொழி :

ஒரு சமயம் யமாமா மாநிலத்தைச் சார்ந்த துமாமா என்னும் முஸ்லிம், வழக்கமாக மக்காவுக்கு அனுப்பி வந்த கோதுமையை நிறுத்தி விடவே, மக்கமா நகரில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. குறைஷிகள், நபிகள் பெருமானாரிடம் தூது அனுப்பி துமாமாவுக்கு மீண்டும் முன்போல் தொடர்ந்து மக்காவுக்கு கோதுமையை அனுப்பி வைக்குமாறு கட்டளையிடக் கேட்டுக் கொண்டனர்.

குறைஷிகள் தமக்கு இழைத்த எல்லாக் கொடுமைகளையும், துன்பங்களையும் நபி அவர்கள் தம் மனதில் வைக்காமல், துமாமாவுக்கு ஆள் அனுப்பி மக்கா மாநகருக்கு உணவுப் பொருள் தடையின்றிச் செல்லுமாறு பணித்து, தம் பகைவர்கள் வயிறு நிரம்ப உண்ணும்படி பழைய நிலைக்கு மீண்டும் வரச் செய்தார். இன்னா செய்தாரை மன்னித்து, அவர்களே வெட்கும்படி நன்மை செய்தவர் நபி (ஸல்) அவர்கள்.

ஆதாரம் : நூல் - அஹமத்

(தொடரும்)

 


Post a Comment

0 Comments