Ticker

6/recent/ticker-posts

Ad Code


 

மிருசுவில் படுகொலை: கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை


யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட  குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு உயர்நீதிமன்றம்  வெளிநாட்டு பயணத்தடையை வியாழக்கிழமை (20) விதித்துள்ளது.

குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவிற்கு மார்ச் 2020 இல்  ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச வழங்கிய  பொதுமன்னிப்பிற்கு எதிராக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மிருசுவிலில் இருந்து இடம்பெயர்ந்த 9 பேர்,  2000ம் ஆண்டு டிசம்பர் 19ம் திகதி தங்கள் வீடுகளை பார்ப்பதற்காக மீண்டும் மிருசுவில் பகுதிக்கு சென்றனர்.இவர்களில் பதின்மவயதினரும்,ஐந்து வயது சிறுவனும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிவந்தவேளை இரண்டு இராணுவத்தினர் அவர்களின் கண்களை கட்டி மோசமாக தாக்கியுள்ளனர்.

ஒரு இளைஞன் அவர்களின் பிடியிலிருந்து தப்பினான்.எனினும் ஏனைய 8 பேரும் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் அருகில் உள்ள பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பகுதியில் மீட்கப்பட்டன.

tamilmirror

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments