வருடா வருடம் ஒரு பதம் பார்க்கும்
புயலைக் கண்டு அஞ்சாத அம்மைக்கு
மாலை ஐந்து மணி சங்கினைக் கேட்டதும்
சிறு அச்சம் பிறக்கத்தான் செய்கிறது.
வண்ணங்களை காண்பித்து
பொம்மைக்கு சோறு ஊட்டுகின்றாள் மகள்
ஒரே வண்ணத்தில் வானவில்லாய்
காட்சியளிக்கிறார் அம்மைக்கு அப்பா.
முதல் துளியிலே காயவைத்த பொருட்களை
எடுத்து பாதுகாக்கும் அம்மைக்கு
முதல் திருமணம் மட்டும் அடை
மழையாக கொட்டியதுதான் கேள்வி.
வருவதும் செல்வதுமான வருமானத்தில்
கடன்களுக்கு கொடுத்து
எஞ்சிய பணத்திற்கு மத்தியில்
"இந்தாப்பா" எனும் மகளின் அரையணா
தீர்க்க முடியாத கடனாகி போகிறது.
வானம் முழுவதும் நிறைந்த
நட்சத்திரம் காணவில்லை
வானவில்லாய் மாறி பிரதிபலித்தன
வானிலும் என் இரு கரங்களை பற்றியும்
மனைவியும் மகளுமாய்.
Tags:
கவிதை