குறைந்த போட்டிகளில் 3 ஆயிரம் ரன்கள்… கபில்தேவ் சாதனையை முறியடித்த அஷ்வின்…

குறைந்த போட்டிகளில் 3 ஆயிரம் ரன்கள்… கபில்தேவ் சாதனையை முறியடித்த அஷ்வின்…

டெஸ்ட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை கடந்ததன் மூலம் கபில்தேவின் சாதனையை ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் முறியடித்துள்ளார்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்திருந்தது.  இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 227 ரன்களும் இந்தியா 314 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 231 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், இந்திய அணி களத்தில் இறங்கியது. இருப்பினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

இறுதியில் அஸ்வின் 42 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இந்த டெஸ்டில் ஆட்டநாயகன் விருது அஷ்வினுக்கு அளிக்கப்பட்டது.

அவர்6 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், மொத்தம் 54 ரன்களை எடுத்தார். இதன் மூலம் 88 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் மற்றும் 3 ஆயிரம் ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். முன்னதாக இதே சாதனையை கபில்தேவ் 131 போட்டிகளில் பங்கேற்று இதே சாதனையை ஏற்படுத்தியிருந்தார். இதனை தற்போது அஷ்வின் முறியடித்திருக்கிறார்.

வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதன் மூலம், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான பாயின்ட்ஸ் டேபிளில், 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அடுத்ததாக இந்தியா – ஆஸ்திரேலியா பங்கேற்கும் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.
news18



 


Post a Comment

Previous Post Next Post