Ticker

6/recent/ticker-posts

பாத்ரூமில் விழுந்து விமானி உயிரிழப்பு... நடுவானில் 271 பயணிகள் - அடுத்து நடந்தது என்ன?


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் இருந்து தென் அமெரிக்க நாடான சிலிக்கு 271 பயணிகளுடன் சென்ற விமானத்தின் பாத்ரூமில் விழுந்து விமானி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தை அடுத்து அந்த விமானம் பாதி வழியிலேயே பனாமாவில் அவசர அவசரமாக தரையிறங்கியது. 

பாதுகாப்பான தரையிறக்கம் துணை விமானி ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் மூலம் தெரியவருகின்றது. LATAM ஏர்லைன்ஸ் விமானம் மியாமி நகரில் இருந்து புறப்பட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு விமானி கேப்டன் இவான் ஆண்டூர், ஏதோ உடல்நலன்  சரியில்லை என்பதை உணர்ந்து பாத்ரூமுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நிலை தடுமாறி விழுந்ததாக கூறப்படுகிறது. 

அவசர தரையிறக்கம்

இதையடுத்து, விமானத்தில் உள்ள மருத்துவ குழுவினரால் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர்களால் அவரின் உயிரை காப்பாற்ற இயலவில்லை என்று தெரிகிறது. பனாமா நாட்டின் டோகுமென் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியதும், மருத்துவ நிபுணர்கள் விமானியை பரிசோதிக்க விரைந்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். ஆண்டூர் 25 வருட அனுபவமுள்ள ஒரு மூத்த விமானி ஆவார். மேலும், உயிரிழந்த விமானியின் வயது 56 என தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த திங்கட்கிழமை (ஆக. 14) விமான நிறுவனம் ஒரு அறிக்கையில், "LATAM ஏர்லைன்ஸ் குழுமம், நேற்று (அதாவது ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்காவின் மியாமி - சாண்டியாகோ வழித்தடத்தில் இருந்த LA505 விமானத்தின், விமானி குழுவின் மூன்று உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக பனாமாவில் உள்ள டோகுமென் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது. விமானம் தரையிறங்கியபோது, அவசரகால சேவைகள் உயிர் காக்கும் உதவியை வழங்கின, ஆனால் விமானி பரிதாபமாக உயிரிழந்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

25 ஆண்டுகால தொழில் வாழ்க்கை

"நடந்த நிகழ்வால் நாங்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளோம், எங்கள் பணியாளரின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய 25 ஆண்டுகால வாழ்க்கை மற்றும் அவரது அர்ப்பணிப்பு, தொழில்முறை அனுபவம் ஆகியவற்றால் எப்போதும் சிறப்பிக்கப்படும் அவரது மதிப்புமிக்க பங்களிப்பிற்காக நாங்கள் நன்றியுணர்ச்சியோடு உள்ளோம். விமான பயணத்தின் போது, பாதிக்கப்பட்ட விமானியின் உயிரைப் பாதுகாக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன," என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

போதுமான பொருட்கள் இல்லையா...?

கடந்த செவ்வாய்கிழமை (ஆக. 15) பனாமாவில் இருந்து புறப்பட்ட விமானம் சிலி நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது "ஒரு நல்ல முதல் உதவி சிகிச்சையை அளிப்பதற்கு தேவையான அல்லது போதுமான பொருட்கள் அவர்களிடம் இல்லை" என்று ஒரு செவிலியர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

போர் விமானி

மறைந்த விமானி ஆண்டூர் 1985ஆம் ஆண்டில், சிலி விமானப் படையின் போர் விமானியாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து, 1998ஆம் ஆண்டில் LATAM விமானி நிறுவனத்தில், வணிக விமானியாக பணிபுரிய தொடங்கியுள்ளார். அவர் உடன் பணியாற்றிய மற்ற விமானிகள் அவரை மிகவும் அன்பானவர், புத்திசாலி, அசாதாரண தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பு மிக்கவர் என்று புகழ்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

SOURCE:zeenews


 



Post a Comment

0 Comments