Ticker

6/recent/ticker-posts

நெல்லையில் பென்சில் கேட்டதால் தகராறு.. பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு!


நெல்லையில் 8ஆம் வகுப்பு பள்ளி மாணவன் சக மாணவன் மீது அரிவாளால் வெட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள பிரபல ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே நடந்த மோதலில், ஒரு மாணவர் மற்றொரு மாணவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை தடுக்க சென்ற ஆசிரியரையும் அந்த மாணவர் வெட்டி உள்ளார். இதனால், படுகாயமடைந்த மாணவரையும் லேசான காயம் அடைந்த ஆசிரியரையும் மீட்ட பள்ளி நிர்வாகத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பள்ளியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, மருத்துவமனையில் உள்ள மாணவர் மற்றும் ஆசிரியர் நலமாக உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தீவிர தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் திருநெல்வேலி காவல் உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அரிவாளால் வெட்ட காரணம் என்ன?

இதுகுறித்து பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஏற்கனவே பென்சில் கேட்டதில் பிரச்னை ஏற்பட்டதன் காரணமாகவே மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளான். மொத்தம் மூன்று இடத்தில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க சென்ற ஆசிரியருக்கும் லேசான வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நலமுடன் உள்ளனர். மாணவன் புத்தகப் பையில் மறைத்து வைத்து அரிவாளை கொண்டு வந்துள்ளார். இது குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

பாளையங்கோட்டை பள்ளியில் மாணவர் மற்றும் ஆசிரியர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

zeenews

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments