Ticker

6/recent/ticker-posts

நபி (ஸல்) அவர்கள்கடமையான தொழுகைக்குப் பிறகு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து தொழுத தொழுகை


வித்ரு தொழுகை

நபி (ஸல்) அவர்கள் கடமையான தொழுகைக்குப் பிறகு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து தொழுத தொழுகை இரவுத் தொழுகையாகும்.

ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம்-2157 

இரவில் தொழும் தொழுகையில் இறுதியாகத் தொழும் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுமாறு நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள்.

இரவில் தொழுபவர் இறுதியாக வித்ர் தொழட்டும். ஏனெனில், இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுவந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ,
நூல்: முஸ்லிம்-1368 

தொழுகையை உரிய நேரத்தில் தொழுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வஸிய்யத் செய்த விஷயங்களில் ஒன்று, தொழுகையை உரிய நேரத்தில் தொழுவதாகும்.

என் உற்ற தோழர் (நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “(உங்கள் தலைவருடைய சொல்லை) செவியேற்று அதற்குக் கட்டுப்பட வேண்டும்; அவர் (கை, கால்) உறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே’ என்றும், தொழுகையை உரிய நேரத்தில் தொழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

“பின்னர் மக்கள் தொழுது முடித்துவிட்ட நிலையில் அவர்களை நீங்கள் அடைந்தால், (முன்பே) உங்களது தொழுகையை நீங்கள் காப்பாற்றிக் கொண்டவராவீரர்கள்; அவ்வாறின்றி (அவர்களுடன் சேர்ந்து நீங்கள் மறுபடியும் தொழுதால்) அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்’’ என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
நூல்: முஸ்லிம்-1142 

இந்தச் செய்தியில் முதலில் ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுதல் தொடர்பாக நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள். ஆட்சித் தலைவரின் தோற்றங்களைக் கவனிக்காமல் முஸ்லிம்களின் தலைவராக இருப்பதால் அவருக்குக் கட்டுப்படுதல் அவசியமாகும். அவ்வாறு நடக்கும் போது தான் நாட்டின் சட்டஒழுங்கு நன்றாக இருக்கும். முஸ்லிம்களுக்கும் வலிமை இருக்கும் என்பதால் இதை நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.

இரண்டாவதாக இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான தொழுகையைப் பற்றி கட்டளையிட்டுள்ளார்கள். நாள் ஒன்றுக்கு ஐந்து நேரம் தொழுவது கடமையாகும். ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரமும் இறுதி நேரமும் உள்ளது. எனவே அந்த நேரத்திற்குள் தொழுவது அவசியமாகும்.
இதையே அல்லாஹ்வும் குறிப்பிடுகின்றான்.

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை, நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

(அல்குர்ஆன்: 4:103)

தொழுகையைத் தாமதப்படுத்தாமல் குறித்த நேரத்தில் தொழுவது அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பத்திற்குரியதாகும்.

‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’’ என்று கேட்டேன். அவர்கள், ‘‘உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது’’ என்றார்கள். பிறகு எது? என்று கேட்டேன். ‘‘தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’ என்றார்கள். பிறகு எது? என்றேன். அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),
நூல்கள்: புகாரி-527 , முஸ்லிம்-137 

தொகுப்பு:
ஜுலைனா பேகம்



Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments