பள்ளி செல்லுமுந்தன் பாதம்
பாதாளம் செல்லலாகாது கண்ணே
பட்டம் பெறுவாய்
பண்பால் உயர்வாய்
பாரே வெல்வாய்
பணிவாய் நடந்து கொள்
பால்யத்திலொரு காதல் வேண்டாம்
கண்ணே
கலைமகனாய் நீ எண்ண
காமுகனாயிருக்கலாம் அவன்
நாகரீகமானவனாய் நீ எண்ண
நாடகக்காரனாயிருக்கலாம் அவன்
வெளுத்ததெல்லாம் பாலுமல்ல
வேஷக்காரர்களின் உலகம் இது
சிந்தித்துக்கொள் சில நொடியேனும்
கண்ணே மணியே
என்பார் ... உந்தன்
காதலின்றி நான்
கதியற்றவன் என்பார்
அன்பே ஆருயிரே என்பார்
ஆயிசும் உன்னருகே தான் என்பார்
பாலருந்தும் வரையில்
பாம்பிற்கு பகைவனும்
நண்பனே பார்த்துக்கொள்
தீ மிதிப்பேன் என்பார்...
நீயின்றி
தீக்குளிப்பேன் என்பார்
தீரா சாபம் வேண்டாம்
திரையிட்டுக்கொள்
கல்வியே கைகொடுக்கும்
காலமும் கைகோர்க்கும்
கானலாய் போகுமந்த
காதலும் வேண்டாம்
கவனமாயிருந்து கொள்
பால்யத்திலொரு காதல்
வேண்டாம் கண்ணே
பள்ளி செல்லுமுந்தன் பாதம்
பாதாளம் செல்லலாகாது கண்ணே




0 Comments