நினைவிலேற்று...!

நினைவிலேற்று...!


அதிகார மோகங்கொண்டு
ஆடிடுமுலகப் போக்கின்
சதிதொடர் சண்டாளர்கள்
சதிபல செய்துமென்ன
விதியினைக்கூட மாற்றும்
வல்லவன் நியதியின்றேல்
பதியிலே தீதுசெய்வோர்
பதறியே அழிந்துசெல்வர்
     
உலகமேயவன் பிடிக்குள்
உசுப்பிடும் சக்தியுள்ளோன்
இலங்கிடு மிறையே அவனின்
இலக்கதே எம்மையாளும்
கலக்கமே கொள்ளா நன்மைக்
கருத்திலே சிந்தையூன்றித்
துலங்கிடும் பணியிறுத்தல்
தூய்மையோர் கடமையாகும்
     
மக்களையாளும் மன்றம்
மனிதநல் நேர்மையோடு
பக்கசார்பற்று நீதி
பயமற்று வாழங்கியுண்மை
தக்கநல் மக்கள் வாழ
தரணியில் நலம்விளைப்பின்
திக்கெலாம் அமைதி தோன்றும்
தீமையோ நகர்ந்து செல்லும்
    
மனிதனைப் பயமுறுத்தும்
மாக்களின் பிடியிற் செல்லா
புனித நல்லுள்ளங் கொண்டு
புரிந்துணர் வொற்றுமையில்
நனிதனில் ஆட்சி செய்ய
நன்மையை விதையிடாது
கனிவிலாப் பகைவிதைப்பின்
காலமும் உனைமுடிக்கும்
    
ஆட்சியைத் தருவோனவனே
அதிகார மமதைப்போதை
காட்டியே அமைதியோரைச்
சிக்கவைத்தடிமையாக்கும்
போட்டியைப் பரப்புவீரேலுன்
போக்கினை யழித்துண்மை
காட்டுவானிறையும் நீதி
காணுவாய் நினைவிலேற்று




Post a Comment

Previous Post Next Post