1.ஓடுகின்ற ஆற்றில்
எந்தத் துளி
முதல் மழைத்துளி.
2.முடிவில்லா கதையில்
அவரவர் விருப்படியே
முடிவு.
3.வானம் வசப்படும் போதெல்லாம்
ஏதாவது ஒரு பறவையின் இறக்கை
எடுத்து வருகிறது கவிதை.
4.எல்லோரிடமும் புன்னகைத்து வை
இப்புவியில் ஒருவருக்கும்
எதிரியென்று யாருமில்லை.
5.ஆயுதங்கள்
ஆண்டவனிடமே இருக்கட்டும்
அநியாயங்களை
அவனொருவனே தட்டிக் கேட்கட்டும்
ஆயுதம் ஏந்த
நீ ஆண்டவனில்லை.
6.சுற்றி இருந்தாலும் காற்றைத்
தேவைக்கு சுவாசிப்பது போல்
அனைத்திலும் அளவோடு இரு.
7.முறைப்படி
ஆடத் தெரியா விட்டாலும்
அனைத்தையும்
ஆட்டிவைக்கிறது காற்று.
8.பொம்மை குருவிக்கு
இரையெடுக்கப் பழக்குகிறது
இரண்டு வயது குழந்தை.
9.முன்புபோல் பொய்களை
அதிகம் பிடிப்பதில்லை
சில காலம் உண்மையோடு
உண்மையாக
வாழ்ந்து விட்டேன்.
10.கோடுகளை ஒருநாளும்
பழிப்பவனல்ல
வரம்பு மீறாமல்
வட்டத்தின் எல்லைக்குள்
உழல வைப்பதினால்.
Tags:
கவிதை