அந்த விதை அங்குதான்
விதைக்கப்பட்டது
எச்சில்கள் துப்பப்பட்டது
யாரோ ஒருவரின் கழிவு
அங்கே கழிக்கப்பட்டது
மொத்தமான இயற்கையை
ஒண்டிப்பிடித்து
புல்லினங்காலின் அழகுகளில்
படாது தப்பிய விதையின்
விருட்சத்தின் கிளையில்தான்
நீங்கள் அமர்ந்து யோசிக்கும்
நாற்காலி உருவாகியுள்ளது.......
நித்திரை கலைந்த மொத்த இருளின்
யாரோ ஒருவரின் இருட்பசியை போக்கிட
சிறு விளக்கு வெளிச்சத்தில்
மொத்த மோகப்பெருவெளியில்
அடர்ந்த மேகமாய் சூழ்ந்த
மனிதப் பரப்பில் சிறு சிறு
காயங்களை துடைத்தெறிந்த
அந்தவொரு மெல்லிய தேகத்தில்
சிலிர்த்து எழும்பி பறிபோகிறது
ஒரு துளி குருதியில் யாரோ
ஒருவரின் அராஜக வேகமும்...மோகமும்......
கிளரிய மண்ணுக்குள்
தீ நுழைந்து நீங்கள் மரமாக வேண்டாம்
மண்புழு செரித்திடாத ஒரு
பசித்தாவரமாய் இல்லாத
இறுகப்பற்றும் ஆல விழுதாய்
மாறிடப்பழகுங்கள்.......
இந்த ஈர காற்றுவெளியில்
ஏதோ சிலாகித்தலை ஆழ்த்தும்
அந்த ஏகாந்த நொடிகளை பற்றி
அகலும் உனது ஒட்டுமொத்த தேவைகளை
பறித்து செல்லும் இடத்தில் ஒரு அடி
பின்னால் வைத்து உனது
உரிமையை இழுக்கப் பழகுங்கள்........
அனாதையில்லங்களின் வாசலில்
இரட்டை மரங்களிலிருந்து
சிந்திய தனியொரு அனாதை
தென்னங்கீற்று பெருக்கெடுத்து
துயரம் பாய்ந்தார்போல் ஒவ்வொரு
கீற்றிலும் சுத்தம் செய்யும் விரல்களாய்
உனது கரங்களை ஊன்றிடப் பழகுங்கள்.....
கண்ணீர் கடலில் கட்டுமரமும்
அலையுமான அனைத்து ஏற்ற
இரக்கங்களில் சிறு அலையென
துள்ளிடு்ம் மீனின் சிறு கடல் துளியாய்
நீ நீச்சலில் காதம் பற்றி பலதூரம் கடந்திடு
நித்தம் துயரிலும் விருட்சமாய் துளிர்விடு......
Tags:
கவிதை