குற்றவியல் தண்டனை சட்டத்தின் 291A4 ஷரத்தின் கீழ் பொதுபல
சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடருமாறு
சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை காவல்துறை திணைக்களத்தின் குற்றத் தடுப்பு
பிரிவின் அதிகாரிகள் நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இதனை
தெரியப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை மத உணர்வுகளை பாதிக்கும் கருத்தை
வெளியிட்டுள்ளதாக ஞானசார தேரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு
அமைய அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல்
செய்யப்படவுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி ஞானசார தேரர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை
நடத்தி இருந்தார். அதில் இஸ்லாமிய புனித நூலான புனித அல் குர் ஆனை அவமதிக்கும்
வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
குற்றச்சாட்டு பத்திரம் இது சம்பந்தமாக நடத்தப்பட்ட
விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில்
ஞானசார தேரருக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சட்டமா
அதிபர், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.