Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-14

மறு நாள் அதிகாலையிலே எல்லோரும் எழுந்து குளித்து விட்டு தங்களுக்கு தேவையான மாற்று உடைகளை மடித்துக் கொண்டு இருந்தார்கள்.

சிலர் சிலர் ஆலயத்துக்கு தேவையான பூஜை பொருட்களை தயார் செய்தார்கள்.

பாட்டியின் மருமக்கள் மூவரும்  பயணத்தின் போது சாப்பிடத் தேவையான உணவு வகைகளை சமைத்துக் கொண்டு இருந்தார்கள். பாட்டி மட்டும் ராமாயணம்  படித்துக் கொண்டு இருந்தார்.  அப்போது மேரி அக்காவும் அங்கே வந்து விட்டார்.

அவரைப் பார்த்த பாட்டி கேட்டாங்க "என்னடி மேரி இப்போதுதானா எழுந்தாய் முகம் உப்பிப் போய் இருக்கு" என்று "இல்லை பெரியம்மா இரவு கொஞ்சம் தலை வலி தூங்க முடியல அதுதான் அப்படி தெரிகிறது முகத்தைப் பார்த்தால்" என்று பாட்டிக்கு பதில் கூறியவாறே அடுப்பங்கரைக்குள் நுழைந்தார்.

அவரைக் கண்ட. பொம்பளைகள் "வாங்க அக்கா" என்றார்கள்.சின்ன மருமகள்  கிட்ட ஓடி வந்து மெதுவாய் கேட்டாள். "வருவது உறுதி தானே ஏமாற்றிடாதே அக்கா"என்று  மேரி அக்கா சிரித்துக் கொண்டே சொன்னார். "இல்லை இல்லை ஏமாற்ற மாட்டேன்  அங்கே லூசியா பொண்ணு எல்லாம் தயார் பண்ணுகிறாள் நான் ச்சும்மா பார்த்துட்டு எத்தனை மணி அளவில் பயணம் என்று கேட்கவே வந்தேன்" என்றார்.  

"ஓ அப்படியா..அப்போ சரி  பத்து மணி போல் வேண் வந்து விடுமாம் வந்தால் போகின்றதுதான்" என்று கூறிக் கொண்டே சாம்பார் தாளித்தாள் மூத்த மருமகள்.

"ஆமா யாருடைய வேணாம் அக்கா"என்று கேட்டதும் சின்ன மருமக அதுக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்தான். "அவளோட புருசன் என் நண்பன் முஸ்தபாவோடா மாமாட வேண்.ஆனால் முஸ்தப்பாதான் கொண்டு வருகிறான் நல்ல கானாப் பாட்டு எல்லாம் போடுவான் ஆமா என் பொண்டாட்டி போடுவா ஆட்டம் பாருங்க அக்கா" என்றான். மேரி அக்காவைப் பார்த்து உடனே "ஏங்க. எப்ப பார்த்தாலும்  கிண்டல் தானா உங்களுக்கு நான் நல்லாத்தான் ஆடுவேன்" என்றாள் புருசனை பார்த்து எரிச்சலோடு.

அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.

அப்போது பாட்டியின் குரல் ஒலிச்சுது "அடேய் உன் பொண்டாட்டி ஆட வேணும் என்றால் நீ போடு கானா பாடலை முதலில் முஸ்தப்பாட்ட சொல்லு. நல்ல பக்தி பாட்டாக கொண்டு வரச் சொல்லி கோயிலுக்கு போகும் போது கானாவும் கோணாவும் தேடாமல்" என்றார் பாட்டி.

"நான் ச்சும்மா கூறினேன் அம்மா"என்று சொல்லி விட்டு அவன் போனை தூக்கிக் கொண்டு மாமர நிழலுக்குப் போய் விட்டான்.

கூடி இருந்த பொம்பளைகள் எல்லோரும் கசுபுசு என்று மெதுவாகவே பாட்டிக்கு திட்டினார்கள்."கோயிலுக்கு போகும் போது பக்திப் பாட்டுத்தான் கேட்க வேணுமா இது யார் வைத்த சட்டம்"என்று.

சற்று நேரத்தில் மேரி அக்கா போய் விட்டார். "உடுத்தி விட்டு வருகிறோம்" என்று அவர் சென்றதும் இவர்களும் வேலையில் மும்முரம் ஆனார்கள்.வாண்டுகள் எல்லாம் உடை மாற்றி விட்டு வீதியைப் பார்த்தவாறு இருக்கின்றனர்."வேண் வருகிறதா" என்று.  

ஒரு வழியாக வேலைகளை முடித்துக் கொண்டு எல்லோரும் தயாரானார்கள்.பத்திரப் படுத்தி பூட்ட வேண்டிய அறைகளை எல்லாம் பூட்டி விட்டு முன் பக்கமாகவே அமர்ந்து விட்டார்கள்.மேரி அக்கா குடும்பமும் வந்து விட்டது.வேணும் வந்து விட்டது.ஓடிப்போய் குழந்தைகள் ஏறி விட உதயன் மட்டும் "வாங்க பாட்டி நான் கையைப் பிடித்துக் கூட்டிப் போகின்றேன்"என்று கூட்டிக் கொண்டு போய் பாட்டியை ஏற்றி விட்டு அவனும் ஏறிக் கொண்டான். 

பாட்டியைப் பார்த்த முஸ்தப்பா "வணக்கம்"கூறி விட்டுக் கேட்டான் "ஏன் பாட்டி இம்முறை வந்து எங்க வீட்டுக்கு வரவில்லை"என்று.

"வரக்கூடாது என்று இல்லை முஸ்தபா. அந்த எண்ணம் எனக்கு வரவேயில்லைடா கோபிக்காதே.வருகிறேன் நீ கேட்ட பின்தான் ஆமா நாமே ஏன் போகல என்று நினைப்பு வருது வயது போச்சு தானேடா" என்று பாட்டி சொல்ல "சரி பாட்டி அதுக்கு என்ன பிறகு வாங்க நான் கோபிக்க மாட்டேன்" என்றான் முஸ்தபா.

இனி எல்லாவெற்றையும் சரி பார்த்து விட்டு மூத்த மருமக ஏறி அமர்ந்ததும் வேண் புரப்பட்டது செந்தில் வடி வேலவா என்னும் பாடலோடு.
(தொடரும்)



 


Post a Comment

0 Comments