Ticker

6/recent/ticker-posts

ஒற்றுமையே உயர்வு


ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்று கூறுவார்கள். மனிதகுலம் ஒன்றுபடுவதனால் கிடைக்கும் நன்மைகள் பலவாகும்.

“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று கூறிய நமது முன்னோர்கள் நமது சமுதாயத்தை ஒன்று பட செய்ய முனைந்தார்கள்.

மனித வாழ்க்கையென்பது தினம் தினம் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சவால்கள் நிறைந்ததாகும்.

இத்தகைய வாழ்க்கையில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக வாழவேண்டும். இங்கு யாரும் தனிமனிதர்கள் கிடையாது என்ற மனநிலை மனிதர்களுக்கு உருவாகவேண்டும்.

இக்கட்டுரையில் ஒற்றுமையே உயர்வு என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஒற்றுமையின் முக்கியத்துவம்.
மனிதர்களுக்களுடன் மனிதர் ஒற்றுமையாக இருந்தால் தான் இவ்வுலகம் அமைதியாக இருக்கும். சண்டையிடுவதில் அர்த்தம் இல்லை.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒற்றுமையாக வாழ்ந்தால் தான் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும்.

ஆதி மனிதர்களும் ஒற்றுமையான வாழ்க்கையை தான் வாழ விரும்பினார்கள். அவர்கள் கூட்டம் கூட்டமாகவே வாழ்ந்தார்கள்.

இன்றைக்கு இனமுரண்பாடு மதமுரண்பாடுகள் தோன்றுவதற்கு மக்களிடையே ஒற்றுமை இன்மையே காரணமாகும்.

இன்றைக்கு உலகநாடுகள் யுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படவும் ஒற்றுமை இன்மையே காரணமாகும்.

வேற்றுமையும் மனிதகுலத்தின் அவலங்களும்
ஒருவரை ஒருவர் வெறுப்பதனாலும் பகைமை கொள்வதனாலும் யாருக்கும் நன்மை விளையாது.

ஒற்றுமையின்மையின் விளைவுகளை சாதாரண உறவுகள் மட்டத்தில் இருந்தே அவதானிக்கலாம்.

ஒரு குடும்பம் இருக்கிறது அங்கு தாயும் தந்தையும் ஒற்றுமையில்லாது சண்டையிடுவதனால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். அக்குடும்பத்தில் சந்தோசம் என்பது இருக்காது.

ஒரு நாட்டுக்குள் பல இன, மத மக்கள் இருப்பார்கள் அவர்களிடையே ஒற்றுமை, புரிந்துணர்வு இல்லாவிட்டால். அதன் விளைவு சண்டை, பிரச்சனை, யுத்தம், உயிரிழப்பு என பாதிப்புக்கள் நீண்டு கொண்டு செல்கிறது.

மக்களிடையே ஒற்றுமை இல்லாமல் போக பணம், அந்தஸ்த்து, மதம், பொருளாதார நிலை போன்ற பல காரணங்கள் காணப்படுகின்றன.

சில சுயநலம் பிடித்த மனிதர்கள் தம்மை தாமே உயர்வாக கருதி கொண்டு மற்றவர்களை மதிப்பதில்லை. இப்படியான மனநிலை கொண்டவர்களே வேற்றுமைக்கு வித்திடுகிறார்கள்.

மனிதர்களிடையே அதிகார போட்டி, மத ஆதிக்கம், இன துவேசம் போன்றவற்றால் உலகம் இது வரை பல போர்களை கண்டிருக்கிறது.

பலபேரின் இறப்புக்களை கண்டிருக்கிறது. பல ஆயிரம் பேரின் கண்ணீருக்கு காரணமாக இருந்திருக்கிறது.

பலபேரை அநாதையாகவும் அங்கவீனர்களாகவும் ஆதரவற்றவர்களாகவும் மாற்ற மனிதர்களின் இரக்கமற்ற சிந்தனைகளும் ஒற்றுமை இல்லாத தன்மையுமே காரணமாகும்.

ஒற்றுமையின் நன்மைகள்
“கூட்டம் கூடுவது எளிதான காரியம் ஆனால் ஒன்றுபடுவது தான் கடினம் உழைப்பும் தியாகமும் சேர்ந்தால் தான் இந்த ஒற்றுமை உணர்ச்சி பிறக்கும்” என்று குறிப்பிடுகிறார் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள்.

அதாவது ஒரு நாட்டில் ஒற்றுமை உள்ள மக்கள் இருந்தால் தான் அந்நாடு சிறந்த நாடாக விளங்கும்.

மேலும் “வால்டர்” என்ற அறிஞர் வளமான ஒருநாட்டின் மக்கள் ஒற்றுமை உணர்வு உள்ளவர்களாகவும் நாகரீகம் பண்பாடு வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள் என்று குறிப்பிடுகிறார்.

உதாரணமாக எமது சமூகத்தில் ஒற்றுமையாக இருக்கும் சமூகம் குடும்பம் என்பன ஒருவருக்கு ஒருவர் உதவியாக நன்மை தீமைகளில் பங்கெடுத்து மகிழ்வாக வாழ்வதை அவதானிக்க முடியும்.

விலங்குகளான எறும்புகள் சேர்ந்தே உணவு தேடும். காக்கைகள் தன் சுற்றத்தை அழைத்தே உணவுண்ணும். சிங்கங்கள் கூட்டமாகவே வேட்டையாடும். பறவைகள் கூட்டமாகவே கடல் தாண்டும்.

இவ்வாறு மனிதர்களும் ஒன்று சேர்ந்து உழைக்கும் போது வெற்றி பெறுகிறார்கள். விளையாட்டுக்களில் வீரர்கள் ஒற்றுமையாக விளையாடினால் தான் வெற்றியை பெற்று கொள்வர்.

உலகத்தில் மனிதன் சாதித்த விடயங்கள் கூட்டு முயற்சியால் உருவானவையாக தான் இருக்கும்.

“ஒத்தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்” என்கிறார் வள்ளுவர். அதாவது ஒற்றுமையாய் வாழ தலைப்படுபவர்களே இங்கு வாழ்வர் மற்றவரல்லாம் இறந்தவர்களாக கருதப்படுவர்.

ஆக நாம் வாழும் வாழ்க்கை குறுகியதாகும். இக்காலத்தில் மற்றவர்களுக்கு உதவுதல், விட்டுகுடுக்கும் மனப்பான்மை மற்றும் இரக்கம் போன்ற நல்ல குணங்களை வளர்த்து ஒற்றுமையாக வாழ்வோம். அதுதான் அர்த்தமுள்ள வாழ்வாகும்.

அனைவரும் ஒன்றாவோம் நல்வாழ்வு வாழ்வோம்

quotesloop



 



Post a Comment

0 Comments