உலக நிலப்படத்தின் தந்தை அல்-இத்ரீஸி!

உலக நிலப்படத்தின் தந்தை அல்-இத்ரீஸி!

॥॥எமது இளம் சந்ததியினர் மூதாதையர் பற்றிய வரலாறுகளைப் படிப்பதில் ஆர்வம் குன்றியவர்களாகக் காணப்படுவது எதிர்காலத்தில் எமது வரலாற்றை நாம் சூன்யமாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு பயங்கர நிலையை உருவாக்கி விடலாம். 

எமது வரலாற்றை மீட்டிப் பார்ப்பதற்கு வரலாற்றில் வந்துபோன நாயகர்களை நாம் நினைவுபடுத்திப் பார்ப்பதும், அவர்களின் பங்களிப்புக்களை நினைவு கூர்வதும், அவற்றை எமது சந்ததியினருக்கு எத்தி வைப்பதுவும் எமது தலையாய கடனாகும். 

எமது சமுகத்திற்காகப் பாடுபட்டு, பணிகள் பல புரிந்த எமது முன்னோர்
எமக்காக விட்டுச் சென்றவைகள் பற்றிய அறிவு நம் எதிர்காலச் சந்ததியினருக்கு நினைவுபடுத்தி வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். உலகில் முன்னுதாரணமாகத் திகழப்படவேண்டிய பலரது வாழ்க்கை வரலாறுகளை "வேட்டை"அவ்வப்போது பதிவிட்டு வருகின்றது. அந்த வகையில் உலகப்படத்தை முதன் முதலாக உருவாக்கித் தந்த "அல்-இத்ரீஸி" பற்றி ஆய்வது இக்கட்டுரையாகும்.॥॥


உலகில் முதன் முதலாக மலைகள், ஆறுகள், கடல்கள் மற்றும் பெரும் ஏரிகள், பெருநகரங்கள், நாடுகளின் எல்லைகளை உட்படுத்தி நிலப்படம் (map) தயாரிக்க 18 ஆண்டுகாலம் பன்னிரெண்டு பேர் கொண்ட குழுவுடன், பல்வேறு இடங்களைச் சுற்றிவந்து, புவியியல் உண்மைகள் பலவற்றை அறிந்து உலக நிலப்படத்தை உருவாக்கியவர் அலட்ரிசி என்று அழைக்கப்படும் அல்-இத்ரீஸி ஆவார். 
கி.பி. 1100ம் ஆண்டளவில் பிறந்த இவர்,   "உலக வரைபடத்தின் தந்தை" என அறியப்படுகின்றார்.

இவர் ஒரு புவியியலாளர், எழுத்தாளர், விஞ்ஞானி, எகிப்தாலஜிஸ்ட், மற்றும் கார்ட்டோகிராபர் (மெப்புகளை வரைவர் அல்லது உருவாக்குபவர்) ஆவார்.

விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருசேர ஒளிவீசிக் கொண்டிருந்த இன்று ஸ்பெயின் என்று அழைக்கப்படும் அல்-அந்தலூஸ் பகுதியைச் சேர்ந்த 'அல்மொராவித்' தேசத்தில் சியூட்டா என்று அழைக்கப்படும் நகரில் ஹம்மூத் குடும்பத்தில் பிறந்த இவர்,  அன்றைய இருண்ட கண்டமான ஐரோப்பாவிற்குக் கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த கொர்தோவாவில் உள்ள பல்கலைக் கலக்கத்தில், தனது பதினாறாவது வயதில் சேர்ந்து கற்று, அன்றைய நாளின் மிகச்சிறந்த புவியியலாளரானார்.

பல இடங்களுக்குப் பயணம் 

அதன் பின்னர், அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வட ஆபிரிக்கா மற்றும் அல்-அந்தலுஸ்  பகுதிகளில் உள்ள பல இடங்களுக்குப் பயணம் செய்து, இரு பிராந்தியங்களைப் பற்றியும் புவியியல் ரீதியான  விரிவான தகவல்களைப் பெற்றார்.

நபி முஹம்மது(ஸல்) அவர்களின்  வழித்தோன்றல்களில் ஒருவராக நம்பப்படும் அல்-இத்ரீஸி, மிக முக்கியமான இளவரசர்கள், கலீபாக்கள் மற்றும் பக்தியுள்ள முஸ்லிம்களின் நீண்ட வரிசையில்  வந்த ஒருவராக ஹம்மூத் வம்சத்தின் இத்ரீஸிகளின் சந்ததியினராவார்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மூத்த பேரன் ஹஸன் இப்னு அலி  அவர்களது வழிவந்தவருமாவார்.

அக்காலை மக்கள் உலகை விளங்கிக் கொள்வதற்கு அறிஞர்கள் மற்றும் வரைபடத் தயாரிப்பாளர்களையும் அவர்களின் ஆராய்ச்சிககையும் நம்பியிருந்தனர்.

உலகின் ஆரம்ப வரைபடங்களை வெளியிடுவதில் மிகவும் பிரபலமான ஒரு  வரைபடக் கலைஞராக, பொதுவாக  அல்-இத்ரீஸி  என்று அழைக்கப்படும், அரபு-முஸ்லிம் புவியியலாளர், தேசசஞ்சாரியான இவர், அபூ அப்துல்லாஹ் முஹம்மது அல்-இத்ரீஸி அல்-குர்தூபி அல்- ஹஸனி  அல்-ஸப்தி(Abu Abd Allah Muhammad al-Idrisi al-Qurtubi al-Hasani al-Sabti, or simply El Idrisi, or  Muhammad al-Idrisi) என்ற முழுப்பெயர் கொண்ட இவர், வரலாற்றில்  அல்-இத்ரீஸி, முகம்மது இத்ரீஸி என்று அறியப் படுகின்றார்.

அல்-இத்ரீஸியின் நூல், உலகப் பிராந்தியங்களில் பயணிக்க ஆர்வமுள்ள ஒருவருக்கான பயணநூலாகவும்,  புவியியல் மற்றும் வரைபடத்தின்  நுணுக்கங்கள் கூறும் தலைசிறந்த படைப்புக்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது. "கண்டுபிடிக்கப்படாத உலகத்தை", கண்டுபிடித்து ஆராய்வதற்கான நூலாக இது கருதப்படுகின்றது. அதனால் இவர் "புவியியலின் தந்தை" என்று அறியப்படுகிறார்.

அறிவியல்களைப் படிப்பத்தற்காக கோர்டோபாவைத்     தேர்ந்தெடுத்த இவர், புவியியல்  சம்பந்தமான தனது படிப்பை முடித்த பின்னர், கோர்டோபாவை விட்டு வெளியேற முடிவுசெய்து, மேற்கு ஐரோப்பா, வடக்கு ஸ்பெயின், போர்ச்சுகல், பிரெஞ்சு அட்லாண்டிக், தெற்கு இங்கிலாந்து,  பைரனீஸ், ஹங்கேரி,  இப்போது யார்க் என்று அழைக்கப்படும் ஜார்வக் மற்றும் ஆசியாவின் பல பகுதிகளுக்கும் தனது வாலிப வயதில் பயணம் செய்தவராவார்.

1145ஆம் ஆண்டில் அவரது வாழ்க்கை, இன்று இத்தாலி என்று அழைக்கப்படும் அன்றைய சிசிலியின் நார்மன் மன்னர் இரண்டாம் கிங் ரோஜர்  தன் நாட்டுக்கு அழைத்தபோது ஒரு திருப்புமுனையாக மாறியது.

அரபு, கிரேக்க அறிவியல் மற்றும் தத்துவ படைப்புகளை லத்தீன் மொழியில் மொழிபெயர்க்க நிதியுதவியளித்த ஓர் அறிவார்ந்த மன்னராக வரலாற்றில் இரண்டாம் கிங் ரோஜர் கருதப்படுகிறார்.
அல்-இத்ரீஸியின் அற்புதமான பயணங்கள் மற்றும் புவியியல் படைப்புகள் பற்றி அவர் கேள்விப்பட்டபோது, அல்-இத்ரீஸிக்குக்  கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து, அல் இத்ரீஸியை சிசிலி(இத்தாலி)க்கு வருமாறு  அழைத்தார்.

அல்-இத்ரீஸி கிங் ரோஜர் II ஐ சந்தித்தவேளை, தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தட்டிக்கழிக்க விரும்பாத அல்-இத்ரீஸி, சிசிலியில் தங்க ஒப்புக்கொண்டார்.

பூமியை உதாரணப்படுத்த முட்டையைப் பயன்படுத்தி விண்வெளியில் பூமியின் நிலையை கிங் ரோஜர் II க்கு அவர்  விளக்கியதோடு, வானத்தில் பூமியானது  விண்மீன் திரள்களால் சூழப்பட்டதைப் போலவே பூமியை வெள்ளை பூசப்பட்ட முட்டையுடன் அவர் ஒப்பிட்டுக் காட்டினார்.

இதன்போதுஅல்-இத்ரீஸியின் புவியியல் அறிவை நன்கு புரிந்துகொண்ட இரண்டாம் கிங் ரோஜர் உலக வரைபடத்தை உருவாக்கும்பணியை அவரிடம்  ஒப்படைத்தார். அத்துடன் இந்த பாரிய திட்டத்தை நிறைவேற்ற அவருக்குத் தேவையான அனைத்தையும் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

சவாலைத் துணிந்து  ஏற்றுக்கொண்ட அல்-இத்ரீஸி அவர்கள், தனது இலக்கை அடைய படிப்படியாகவும் மிகவும் கவனமாகவும் பணியாற்றலானார்.

அல்-இத்ரிஸி செய்த முதல் விஷயம், அவரது பணியை நிறைவேற்றவும், அவருக்கு உதவவும் பன்னிரெண்டு ஆண்கள் கொண்ட  ஒரு குழுவை  அமைத்ததாகும்.

புதிய வழிசெலுத்தல், தொழில்நுட்பம், கணிதம் மற்றும் நிலவரைபடவியல் பற்றிய அறிவைக் கொண்டுள்ளவர்களை அவர் தெரிவு செய்தார். அவரது கவனமான மேற்பார்வையின் கீழ், செயற்பட்ட இக்குழு, வழங்கிய புதிய வழிசெலுத்தல், தொழில்நுட்பம் பற்றி ஆராய்ந்தவைகளையும்,  கணக்கீடு செய்தவைகளையும் அவர் நெறிப்படுத்தி ஆவணப்படுத்தினார். 

தனது பயணங்களிலிருந்து தகவல்களைச் சேகரிப்பதைத் தவிர, குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்ற மாலுமிகளுடன் அவர் செய்த நேர்காணல்களிலிருந்தும் தகவல்களைச் சேகரித்தார். ஆனால் கிங் ரோஜர் II க்கு இது போதுமானதாக இருக்கவில்லை;  இதை விடவும் அதிகமாக அவர் எதிர்பார்க்கலானார்.

இரண்டாம் கிங் ரோஜர் தனது சொந்தக் கப்பல்களை, ஆராயப்படாத பகுதிகளுக்கு அனுப்ப முடிவு செய்தார்.

அல்-இத்ரீஸி  இந்தப் பணியை நிறைவேற்ற தைரியமான மற்றும் கடின உழைப்பாளிகளான மாலுமிகளையும் சிறந்த வரைவாளர்களையும் ஒன்றுபடுத்தினார். அந்த மாலுமிகளும் நிலவரைவாளர்களும்  உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.

அவர்கள் மத்திய கிழக்கு, தூர கிழக்கு, யூரேசியா, ஆபிரிக்க நாடுகளிலிருந்து திரும்பி வந்தபோது,​​“வானத்திலிருந்து பனி விழும் மற்றும் சூரியன் ஒருபோதும் பிரகாசிக்காத ஒரு குளிர்கால நிலங்கள் (ஐஸ்லாந்து, கிரீன்லாந்தாக இருக்கலாம்), பற்றி விவரித்தவைகளையும், அவை பற்றிய விவரங்களையும்  அவற்றின் வரைபடங்களை பெற்றுக்கொண்ட அல்-இத்ரீஸி,  தனது பணிக்கு வடிவம் கொடுத்து உலக நிலப்படத்தை (map) வரைந்தார்.

ஓர்  உலக நிலப்படத்தையும்,உலகம் சார்ந்த ஒரு புவியியல் நூலையும் தொகுத்த அல்-இத்ரீஸி,  சிசிலியில் 18 ஆண்டுகளில் மூன்று முக்கிய புவியியல் படைப்புகளை வெளியாக்கினார்.

உலக வரைபடம் வரையப்பட்ட ஒரு வெள்ளிக்கோளம், 70 பிரிவுகளைக் கொண்ட உலக வரைபடம், பூமத்திய ரேகைக்கு வடக்கே பூமியை 7 காலநிலை மண்டலங்களாகப் பிரிப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது. சம அகலம், அவை ஒவ்வொன்றும் 10 சம பாகங்களாக தீர்க்கரேகைக் கோடுகளால் பிரிக்கப்பட்டன, கடைசியாக ஒரு புவியியல் உரை முக்கியமாகக் கருதப்பட்டது.

அல்-இத்ரிஸியின் புவியியலின் சிறந்த விளக்கப்  படைப்பான கிதாப் ருஜார், அல்லது அல்-கிதாப் அர்ருஜெரா(“ரோஜரின் புத்தகம்”அல்லது லத்தீன் மொழியில்:“தபுலா ரோஜெரியானா”) "The Map of Roger” என அழைக்கப்படுகிறது.

இவ்வாறான உலகம் போற்றும் சிறந்த புவியியலாளர் மற்றும் நிலப்படவியலாளருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில், "நாசா" புளூட்டோவில் நன்கு அறியப்பட்ட மலையடிவாரமான ஸ்பூட்னிக் பிளானத்தை “அல்-இத்ரீஸி மலைகள்” என்ற பெயர் கொடுத்து கௌரவித்தது.

'தபுலா ரோஜெரியானா' 

'தபுலா ரோஜெரியானா' 1154ம் ஆண்டில் சிசிலியின்
கிங் ரோஜர் II க்காக அல்-இத்ரிஸியால் வரையப்பட்டது. பதினெட்டு ஆண்டுகள் அவரது மாளிகையில் தங்கி இப்பணியை அவர் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

டாபுலா ரொஜாரியான’  Tabula Rogeriana என்ற உலக வரைபடத்தை சுமார் 6 அடி விட்டமும், 450 பவுண்ட் கனமும் உள்ள வெள்ளித் தட்டில் பொறித்து  அல் ஈஈஇத்ரீஸியால்  அரசவையில் சமர்ப்பிக்கப்பட்ட வெள்ளிக்கோளம் இப்போது தொலைந்துவிட்டதாக அறியப்படுகின்றது. ஆனால் வரைபடங்கள் மற்றும் புத்தகம் பிழைத்துள்ளன.
             
உலகின் பிராந்தியங்களை பயணிக்க ஆர்வமுள்ள ஒருவரின் உல்லாசப் பயணம் 1154 சிசிலியின் கிங் ரோஜர் II இன் மரணத்திற்கு சற்று முன்பு நிறைவடைந்தது. முடிக்கப்பட்ட தயாரிப்பில் புவியியல் கண்டுபிடிப்புகளை விளக்கும் உரை மற்றும் பூமத்திய ரேகைக்கு வடக்கே உலகத்தை உள்ளடக்கிய 70 வரைபடங்களின் தொகுப்பு ஆகியவை அடங்கும்.
அல்-இத்ரிஸியின் இப்பணி லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளவில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த வரைபடத்தை கிறிஸ்டோபர் கொலம்பஸ் மற்றும் வாஸ்கோட காமா போன்ற பல ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் மேற்கொண்ட பயணங்களுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

அவரது நிலவரைபடம் இவர்கள் இருவருக்குமே ஊக்கமளித்தது மட்டுமல்லாது, இஸ்லாமிய புவியியலாளர்களும், நடுக்காண் சஞ்சாரிகளுமான  இப்னு பதூதா, இப்னு கல்தூன் மற்றும் பிரி ரெய்ஸ் ஆகியோரை அல்-இத்ரீஸியின் ஏனைய ஆக்கங்கள்   ஊக்கப்படுத்தின எனலாம்.

நவீன காலத்திற்கு முந்தைய கால உலகின் மிகத்துல்லியமான வரைபடத்தை உருவாக்க நார்மன் வோயஜர்கள் கொண்டு வந்த தகவல்களுடன், ஆபிரிக்கா, இந்தியப் பெருங்கடல் மற்றும் தூர கிழக்கு நாடுகளில் பயணம் மேற்கொண்ட  இஸ்லாமிய வணிகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்தவைகளையும்  இஸ்லாமிய வரைபடங்களில் பதிவுசெய்து,  கிதாப் நுஜாத் அல்-முஷ்டாக், (லத்தீன்:Opus Geographicum) என்ற  உறுதியான விளக்கமாக அவர்  வெளியிட்டமையும்  குறிப்பிடத்தக்கது.

அல்-இத்ரீஸியின் புவியியல் பணிகள் குறித்து,எஸ்.பி. ஸ்காட் 1904 இல் எழுதிய குறிப்பின் தமிழாக்கம்:

"அல்-இத்ரீஸியின் தொகுப்பு அறிவியல் வரலாற்றில் ஒரு சகாப்தத்தை குறிக்கிறது. அதன் வரலாற்றுத் தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை மற்றும் மதிப்புமிக்கவை மட்டுமல்ல, பூமியின் பல பகுதிகளைப் பற்றிய அதன் விளக்கங்களும் அதிகாரபூர்வமானவை. மூன்று நூற்றாண்டுகளாக புவியியலாளர்கள் அவரது வரைபடங்களை மாற்றாமல் நகலெடுத்தனர்..."  

S.P. Scott wrote in 1904:
"The compilation of al-Idrisi marks an era in the history of science. Not only is its historical information most interesting and valuable, but its descriptions of many parts of the earth are still authoritative. For three centuries geographers copied his maps without alteration..."

செம்மைத்துளியான்


 



Post a Comment

Previous Post Next Post