Ticker

6/recent/ticker-posts

20-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

(நபி வழியில் தொழுகை)

16. ஸுஜூத் செய்தலும் அதில் தாமதித்தலும்:

இஃதிதால்’ நிலையிலிருந்து தக்பீர் கூறிய வண்ணம் ஸுஜூதுக்கு செல்ல வேண்டும்.

“நபியவர்கள் ஸுஜூதுக்கு செல்லும் போது தக்பீர் கூறியவாறு இரு கைகளையும் விலாவோடு சேர்க்காமல் ஸுஜூதுக்கு செல்வார்கள்’ (இப்னு ஹஸைமா, அபூ யஃலா).

தொழுகையின் நிலைகளில் ஸுஜூத் மிகுந்த முக்கியத்துவமுடைய, அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நிலையாகும்.

நபிகளார் கூறினார்கள் :”ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருப்பது ஸுஜூதில் இருக்கும் போதாகும். எனவே அதில் அதிகமாக பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்” (முஸ்லிம்)

ஸுஜூத் செய்யும் போது பின்வரும் ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டும்:

1.ஸுஜூத் செய்யும் போது ஏழு உறுப்புகள் நிலத்தில் பட வேண்டும்

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘நான் நெற்றி, இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸுஜூத் செய்யும்படி கட்டளையிடப் பட்டுள்ளேன். (நெற்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது) தமது கையால் தமது மூக்கை நோக்கி சுட்டிக்காட்டினார்கள்” (புஹாரி, முஸ்லிம்).

நபியவர்கள் கூறினார்கள்: நான் நெற்றி-மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்(களின் நுனி)கள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸுஜூத் செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ளேன் (புஹாரி, முஸ்லிம்).

மேற்படி இரு ஹதீஸ்களிலும் நெற்றி, மூக்கு ஆகிய இரு உறுப்புகளையும் நபிகளார் ஒன்றாக கணக்கிடுவதனாலேயே ஏழு உறுப்புகள் என குறிப்பிடுகிறார்கள்.

2.இரு கை விரல்களையும் பொத்தாமல் விரித்து வைத்தல் :

நபியவர்கள் தமது இரு கைவிரல்களையும் (பொத்தாமல்) விரித்து வைப்பதோடு அவற்றை ஒன்றோடொன்று சேர்த்தவர்களாக கிப்லாவை முன்னோக்கி வைப்பார்கள் (அபூதாவூத், ஹாகிம்).

3.இரு கைகளையும் தோள்புயங்களுக்கு ஃ காதுகளுக்கு நேராக வைத்தல் :

“இரு கைகளையும் (நிலத்தில் வைக்கும் போது) தங்களது தோள்புயங்களுக்கு நேராக வைப்பார்கள்” (அபூதாவூத், திர்மிதி).

“(சிலநேரங்களில்) இரு கைகளையும் தமது இரு காதுகளுக்கு நேராக வைப்பார்கள்’ (அபூதாவூத்,நஸாஈ).

4.இரு கைகளையும் விலாவோடு சேர்க்காமல் தரையிலிருந்து உயர்த்தி வைத்தல் :

“நபியவர்கள் தமது இரு கைகளையும் தரையில் படுக்க வைக்காமல் உயர்த்தியவர்களாக, இரு விலாக்களோடும் சேர்க்காமல் விலக்கிவைப்பார்கள்” (புஹாரி, முஸ்லிம்).

5.கைகளுக்கும் தொடைகளுக்குமிடையே இடைவெளி விடுதல் :

“நபியவர்கள் ஸுஜூத் செய்தால் கைகளுக்கும் தொடைகளுக்குமிடையே ஆட்டுக் குட்டியொன்று செல்லுமளவு இடைவெளி இருக்கும்” (முஸ்லிம்)

6.இரு கால் விரல்களையும் மடக்கி கிப்லாவை முன்னோக்கி வைத்திருப்பதோடு,இரு பாதங்களையும் சேர்த்து வைத்தல் :

ஆயிஷா (றழி) அறிவிக்கிறார்கள் :”ஓர் இரவு படுக்கையில் இருந்த நபியவர்களை காணவில்லை,எங்கே என்று பார்த்த போது அவர்கள் இரு குதிகால்களையும் ஒன்றாக சேர்த்தவர்களாக, கால் விரல்களை மடக்கி அவற்றை கிப்லாவை முன்னோக்கி வைத்த நிலையில் ஸுஜூத் செய்தவர்களாக இருக்க கண்டேன்” (இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்).

7.ஆடைகளையோ, தலைமுடியையோ சேர்த்து பிடிக்க கூடாது :

” ஸுஜூத் செய்யும் போது ஆடைகளையோ, தலைமுடியையோ (கைகளால்) சேர்த்து பிடிக்க கூடாது “என அல்லாஹ்வினால் எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது என நபியவர்கள் கூறினார்கள் (புஹாரி,முஸ்லிம்).

மேற்கூறப்பட்ட ஒழுங்குகள் அனைத்தும் ஆண்களுக்கு மட்டுமன்றி பெண்களுக்கும் உரியவையாகும்.

மேற்கூறப்பட்ட ஒழுங்குகளுக்கு மாறாக,
  • ஸுஜூத் செய்யும் போது கைகளை நிலத்தில் படுக்க வைத்தல்
  • முழங்கைகளை தொடையோடு சேர்த்து வைத்தல்
  • மூக்கை தரையில் படாமல் வைத்தல்
  • கால்விரல்களை கிப்லாவை முன்னோக்கி மடக்காமல் குத்தி வைத்தல்

ஸுஜூதுக்கு செல்லும் போது தலைமுடியையோ, ஆடைகளையோ கைகளால் கூட்டிப் பிடித்தல் ஆகிய அனைத்தும் பிழையானவையும் நபிவழிக்கு முரணானவையுமாகும்.

இரண்டு எச்சரிக்கைகள் :

1.நபிகளார் கூறினார்கள் : ‘ஸுஜூதில் நடுநிலை பேணுங்கள். உங்களில் ஒருவர் (ஸுஜூதின் போது) தன் இரு முன்னங்கைகளையும் நாய் தன் முன்கைகளை விரித்து வைத்திருப்பது போன்று விரித்து வைக்க வேண்டாம்” (புஹாரி, முஸ்லிம்).

2.நபியவர்கள் ஒரு தடவை, ‘தொழுகையில் திருடுபவனே மிக மோசமான திருடன்” என கூறிய போது ஸஹாபாக்கள் ‘தொழுகையில் திருடுவது என்றால் எப்படி?” என்றார்கள். நபியவர்கள் “றுகூஉவையும் ஸுஜூதையும் பூரணமாக செய்யாமல் விடுவதே தொழுகையில் திருடுவதாகும்” என கூறினார்கள் (தபரானி, ஹாகிம்).

மேலும் றுகூஉ, ஸுஜூத் ஆகிய நிலைகளில் (பர்ழ் மற்றும் ஸுன்னத் ஆகிய இரு தொழுகைகளிலும்) அல்குர்ஆன் வசனங்களை ஓதுவது தடை செய்யப்பட்டதாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :”றுகூஉவிலும் ஸுஜூதிலும் அல்குர்ஆனை ஓதுவது எனக்கு தடை செய்யப்பட்டுள்ளது’ (முஸ்லிம்).

ஸுஜூதில் நபியவர்கள் பல திக்ருகளை ஓதியுள்ளார்கள். அவற்றுள் சில :

سُبْحَانَ رَبِّيَ الْأَعْلٰى
‘ ஸுப்ஹான றப்பியல் அஃலா’(03 அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள்) – (அஹ்மத், அபூதாவூத்).

سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوْحِ
‘ஸுப்பூஹுன் குத்தூஸுன் றப்புல் மலாஇகதி வர் ரூஹ்’ (முஸ்லிம்).

سُبْحَانَكَ اللّٰهُمَّ رَبَّنَا وَبِـحَمْدِكَ اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ
”ஸுப்ஹானகல்லாஹும்ம றப்பானா வபிஹம்திக அல்லாஹும்மஹ்பிர்லீ ’ (நபியவர்கள் இதை ருகூஉவிலும் ஸுஜூதிலும் அதிகமாக ஓதுவார்கள்) -(புஹாரி, முஸ்லிம்). 

(தொடரும்)

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி) 



 



Post a Comment

0 Comments