Ticker

6/recent/ticker-posts

22-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

(நபி வழியில் தொழுகை)



18.இரண்டாவது ஸுஜூத் :

நடு இருப்பிலிருந்த பின் இரண்டாவது ஸுஜூதுக்கு செல்ல வேண்டும்.

“நபியவர்கள் நடு இருப்பிலிருந்து அல்லாஹு அக்பர் என்று கூறியவர்களாக இரண்டாவது ஸுஜூதை நிறைவேற்றுவார்கள்” (புஹாரி, முஸ்லிம்).

முதல் ஸுஜூதில் பேணப்பட்ட அனைத்து ஒழுங்குகளும் இரண்டாவது ஸுஜூதிலும் பேணப்படவேண்டும்.

19. ஆறுதல் பெறும் இருப்பு (ஜல்ஸதுல் இஸ்திராஹா) :

இரண்டாவது ஸுஜூதை முடித்த பின் இரண்டாவது றக்அத்துக்கு செல்ல முன் சொற்ப நேரம் அமர்ந்து ஆறுதல் பெறுவது நபியவர்களின் நடைமுறையாகும்.

” இரண்டாவது ஸுஜூதிலிருந்து அல்லாஹு அக்பர் என்று கூறியவர்களாக எழுந்து ( நடு இருப்பில் அமர்வது போன்று) அமர்வார்கள். உடல் உறுப்புகள் அனைத்தும் ஆறுதல் பெறும் அளவுக்கு ஒரு சொற்ப நேரம் இவ்விருப்பில் தாமதிப்பார்கள்” (புஹாரி, அபூதாவூத்).

இவ்விருப்பில் எதுவும் ஓதுவதில்லை.

நபிகளார் இவ்விருப்பில் அமராமல் நேரடியாக மூன்றாம் றக்அத்துக்கு சென்றார்கள் என்று ஒரு சில ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவை அனைத்தும் ஆதாரமற்ற பலவீனமான ஹதீஸ்களாகும் என இமாம் அல்பானி (ரஹ்) குறிப்பிடுகிறார்கள் (பார்க்க :”அஸ்லு ஸிபதி ஸலாதிந் நபி”, 1ஃ819-821).

பின்னர் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி எழுந்து இரண்டாவது றக்அத்துக்கு செல்ல வேண்டும்.

“….நடு இருப்பில் இருந்து நபியவர்கள் கைகளை நிலத்தில் ஊன்றி எழும்புவார்கள்’ (நஸாஈ, பைஹகி).

இதே வேளை,”நபியவர்கள் கைகளை ஊன்றாமல் எழும்புவார்கள்” என்று வரக்கூடிய ஹதீஸ்களில் சில இட்டுகட்டப்பட்டவையும் மற்றும் சில பலவீனமானவையுமாகும் என இமாம் அல்பானி (ரஹ்)

நிறுவுகிறார்கள் (அஸ்லு ஸிபதி ஸலாதிந் நபி  1ஃ824).

அதே நேரம், மற்றுமொரு ஹதீஸ் இவ்வாறு வருகிறது.

” நபியவர்கள் அடுத்த றக்அத்துக்கு செல்லும் போது கைகளை தமது தொடைகளில் ஊன்றி எழும்புவார்கள்” (அபூதாவூத்).

ஆயினும் இந்த ஹதீஸின் இரு அறிவிப்பாளர்களிடையே தொடர்பறுந்து காணப்படுவதால் இது பலவீனமான ஹதீஸ் என இமாம் நவவி (ரஹ்) மற்றும் அல்பானி (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர் (நூற்கள் :”அல்மஜ்மூஃ|, 3ஃ446,”ஸிபதுஸ் ஸலாஹ், 1ஃ819).

எனவே சுருங்கக் கூறின்,
அடுத்த றக்அத்துக்கு எழும்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய சரியான முறைகள்:

இரண்டாவது ஸுஜூதுக்கு பின் சற்று நேரம் அமர்தல்

பின்னர் கைகளை நிலத்தில் ஊன்றி எழும்புதல்

இதே ஒழுங்குகளையே மூன்றாவது, நான்காவது றக்அத்துகளுக்கு எழும்பும் போதும் கடைப்பிடிக்க வேண்டும். 

(தொடரும்)

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி) 


 



Post a Comment

0 Comments