அரசின் அதிரடி மாற்றங்கள்-16

அரசின் அதிரடி மாற்றங்கள்-16


ஜேர்மன் தூதுவர் சந்திப்பு:

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனும் 2024.10. 9ம் திகதி முற்பகல் ஜனாதிபதியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

புதிய ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், ஜேர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஸ்கொல்ஸின் (Olaf Scholz) வாழ்த்துச் செய்தியையும்  வழங்கி வைத்தார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நிரந்தர பங்காளியாக ஜேர்மனி உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், ஜேர்மனிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் அந்த ஒத்துழைப்பை மேலும் பேணுவதற்கு ஜேர்மனி கொண்டுள்ள அக்கறையை தூதுவர் நியூமன் வலியுறுத்தினார்.

மனித வள அபிவிருத்தியில் ஜேர்மனியின் 70 வருட அனுபவத்தை வலியுறுத்திய தூதுவர், இலங்கையில் மனித வள அபிவிருத்தியை வலுப்படுத்த தனது ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

மேலும், இலங்கையின் தொழில்நுட்பக் கல்வித் துறையில் முக்கிய பங்காற்றுகின்ற கட்டுபெத்த மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரிகளின் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கு ஜேர்மன் உதவி வழங்கப்படுமெனவும் தூதுவர் குறிப்பிட்டார். இலங்கையில் அரச சேவையின் வினைத்திறனை அதிகரிக்க ஜேர்மனி ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக தூதுவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் ஏற்றுமதித் திறனுக்கு அமைவாக இலங்கைக்கு சிறந்த வாய்ப்பை வழங்கக் கூடிய  இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதிநிதித்துவப்படுத்த ஆர்வம் காட்டுமாறும் அவர் கூறினார்.

வத்திக்கான் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி சந்திப்பு:

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (09)  இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி வணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகையை (Rev. Dr.Brian Udaigwe) ஜனாதிபதி சந்தித்தார்.

இதன்போது புதிய ஆட்சிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த உதைக்வே ஆண்டகை, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் இறைமைமிக்க வத்திக்கான் அரசின் பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ்  அவர்களின் உளப்பூர்வமான வாழ்த்துச் செய்தியையும்  கையளித்தார். 

இலங்கையின் எதிர்காலம் குறித்து தனது சாதகமான கருத்தை வெளிப்படுத்திய அவர், மக்கள் எதிர்பார்க்கும் வகையில் நாட்டில் ஏற்கனவே சிறப்பான அபிவிருத்திகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். அது தொடர்பான எமது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், அந்த முயற்சிகள் அனைத்திற்கும் வத்திக்கான் ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொண்ட மிகவும் மோசமான அனுபவமான உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்த  உதைக்வே ஆண்டகை, அது தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முயற்சியையும்  பாராட்டினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதற்காக எமது தொடர்ச்சியான முயற்சிகளுக்கு வத்திக்கானின் முழு ஆதரவையும் வழங்குவதாக உதைக்வே ஆண்டகை உறுதியளித்தார். இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை நாடு மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் இருதரப்பிற்குமிடையில் இச்சந்திப்பின்போது, உடன்பாடு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய அணி:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயக குரல்  அரசியல் கட்சி கொழும்பில் 2024.10.09 அன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.  

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டி.எம். டில்ஷான் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்படவுள்ளதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷும் கட்சியில் இடம்பெற்றுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகிய பாரத் அருள்சாமி ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைந்தார்.

சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு:

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்டை (Siri Walt) 2024.10.9ம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தார்.

புதிய ஆட்சிக்கு வாழ்த்துத் தெரிவித்த தூதுவர் கலாநிதி சிறி வோல்ட், சுவிட்சர்லாந்து அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது செயற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் ஊடாக சுவிட்சர்லாந்து இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதி பூண்டுள்ளதாக உறுதிப்படுத்திய தூதுவர், ஊழலுக்கு எதிரான எமது முயற்சிகளுக்கு சுவிட்சர்லாந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறையில் சுவிட்சர்லாந்தின் நிபுணத்துவத்தையும் இதன்போது எடுத்துரைத்த அவர், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அந்த துறைகளில் இலங்கைக்கு ஆதரவை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அரசியலமைப்பு மறுசீரமைப்புகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்   குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த துறைகளில் இலங்கையின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்து ஆதரவை வழங்கும் என்று தூதுவர் சிறி வோல்ட் உறுதியளித்தார்.

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளையும், இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் நிர்வாக விடயங்களில் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சுவிட்சர்லாந்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் தூதுவர் மேலும்  உறுதிப்படுத்தினார்.

தாய்லாந்து தூதுவர் சந்திப்பு:

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைடூன் மகபன்னபோர்ன் அவர்களை (Paitoon Mahapannaporn) 2024.10.9 அன்று ஜனாதிபதி தனது அலுவலகத்தில் சந்தித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றி தொடர்பில் தனதும்  தாய்லாந்து அரசாங்கத்தினதும்  வாழ்த்துக்களை ஜனாதிபதியிடம் தெரிவித்த தாய்லாந்து தூதுவர், தாய்லாந்து நாட்டு மன்னர் வஜிரலோங்கொன் அனுப்பிய விசேட வாழ்த்துச் செய்தியையும்  கையளித்தார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியின் ஆட்சிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்த தாய்லாந்து தூதுவர், புதிய அரசாங்கத்தின் மீதான மக்களின்  நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை நனவாக்குவதற்கு  தாய்லாந்து அரசாங்கம்  ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்தார்.

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் (FTA) நன்மைகள் பற்றியும் தாய்லாந்து தூதுவர் விளக்கமளித்ததுடன், அது பரஸ்பர பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார். மேலும், இலங்கையில் தாய்லாந்து முதலீட்டை ஊக்குவிப்பதற்காக குறிப்பாக உள்ளூர் பழங்கள் மற்றும் பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்வது குறித்தும் இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.

தாய்லாந்தின் சுற்றுலாத்துறையின் வெற்றிக்கு உதவிய காரணிகள் குறித்து என்னிடம் எடுத்துரைத்த தாய்லாந்து தூதுவர், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட விருப்பம் தெரிவித்தார்.

இலங்கையின் வரலாற்று ரீதியான பௌத்த பாரம்பரியத்திற்கு விசேட முக்கியத்துவம் அளித்து, தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளின் முன்னணி இடமாக இலங்கையை மாற்றுவதற்கு தாய்லாந்தின் ஆதரவு கிட்டும் எனவும் அவர் உறுதியளித்தார். 

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையில் விசா இல்லாத சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்தும் இரு தரப்பு கவனமும் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் உறுதிப்படுத்திய இந்த சந்திப்பில், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா போன்ற முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பும் இங்கு  வலியுறுத்தப்பட்டது.

வியட்நாம் தூதுவர் சந்திப்பு:

இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டெம் (Trinh Thi Tam) 2024.10.09 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில்  ஜனாதிபதியைச் சந்தித்தார்.

புதிய ஆட்சிக்குத் தனதும், வியட்நாம் அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தினதும் வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தி முன்னோக்கிச் செல்வதற்கு தனது சாதகமான கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) மற்றும் வர்த்தகத் துறையில் வியட்நாம் அடைந்துள்ள வெற்றிகள் குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையில் அந்த துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு வியட்நாமின் ஆதரவை எதிர்பார்ப்பதாக  ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பௌத்த மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையை வியட்நாம் சுற்றுலாப் பயணிகளின் முன்னணித் தளமாக மாற்றுவதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் குறித்து கண்டறிவதாகவும் தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் இரு நாடுகளின் அர்ப்பணிப்பு தொடர்பாகவும் இந்த சந்திப்பில் மேலும் வலியுறுத்தப்பட்டது.

சுங்கத் திணைக்கள,உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் சந்திப்பு:

இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள  சிரேஷ்ட அதிகாரிகளை  ஜனாதிபதி  கடந்த 2024.10.09 அன்று தனது அலுவலகத்தில் சந்தித்தார்.   

அரசாங்கத்தின் விரிவான பொருளாதார மற்றும் ஒழுங்குபடுத்தல் மறுசீரமைப்புகளுக்கு ஏற்ப இந்த இரண்டு திணைக்களங்களிலும் வருமானம் ஈட்டல் மற்றும் செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மூலோபாய திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

வருமான முகாமைத்துவம் மற்றும் வரி அறவீடுகளில் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இரு திணைக்கள அதிகாரிகளும்,  இதன்போது   எனக்கு எடுத்துரைத்தனர்.   இந்தப் பிரச்சினை களை திறம்பட கையாள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கும் சுங்கத் திணைக்களத்திற்கும் இடையில் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் இங்கு வலியுறுத்தப்பட்டது.

வரிச் சட்டங்களின் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த அமுலாக்கத்தை உறுதி செய்தல், வரி ஏய்ப்பைத் தடுப்பது மற்றும் வருமான சேகரிப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை சுங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சுங்கப் பணிப்பாளர் நாயகம் பி.பி.எஸ்.சி நோனிஸ், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகங்களான, எச்.டபிள்யூ.எஸ்.பி கருணாரத்ன, சி.எஸ்.ஏ.சந்திரசேகர, டபிள்யூ.எஸ்.ஐ. சில்வா, எஸ். பி. அருக்கொட, ஜே. எம். எம். ஜி. விஜேரத்ன பண்டார, சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் ஏ. டபிள்யூ. எல்.சி. வீரகோன், பிரதம நிதி அதிகாரி எம். ஆர்.ஜி.ஏ.பி. முதுகுட உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எஸ். சந்திரசேகர, பிரதி ஆணையாளர் நாயகங்களான பி.கே.எஸ். சாந்த, ஜே.ஏ.டி.டி.பி.கே சிறிவர்தன, ஜே.டி. ரணசிங்க, டி.எம்.என்.எஸ்.பி திசாநாயக்க, எச்.எச்.எஸ்.சமந்த குமார, சிரேஷ்ட ஆணையாளர் டி.எம்.எஸ்.தென்னகோன் ஆகியோர் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.
CLICK 👇👇👇
அரசின் அதிரடி மாற்றங்கள்-1
அரசின் அதிரடி மாற்றங்கள்-2
அரசின் அதிரடி மாற்றங்கள்-3
அரசின் அதிரடி மாற்றங்கள்-4
அரசின் அதிரடி மாற்றங்கள்-5



 



Post a Comment

Previous Post Next Post