
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பிப்ரவரி 24ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள ராவில்பிண்டி நகரில் 6வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் நியூசிலாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்திற்கு கேப்டன் நஜ்முல் சாண்டோ நங்கூரமாக விளையாடினார்.
ஆனால் எதிர்புறம் தன்சிம் ஹசன் 24, மெஹதி ஹசன் 13, தௌஹீத் ஹ்ரிடாய் 7, ரஹீம் 2, மஹ்மதுல்லா 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாடிய சான்டோ அரை சதத்தை அடித்து 77 ரன்கள் குவித்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஜாகிர் அலி 45, ரிஷத் ஹொசைன் 26 ரன்கள் எடுத்தார்கள்.
இறுதியில் 50 ஓவரில் வங்கதேசம் போராடி 236-9 ரன்கள் குவித்தது. நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல் 4, வில்லியம் ஓ’ரோர்கே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக 237 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு வில் எங் 0, கேன் வில்லியம்சன் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் நிதானம் காட்டிய டேவோன் கான்வே 30 ரன்களில் அவுட்டானார்.
ஆனால் நான்காவது இடத்தில் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா ஆரம்பம் முதலே நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் டாம் லாதம் சேர்ந்து நங்கூரமாக விளையாடினார். அந்த வகையில் நான்காவது விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் அரை சதமடித்தனர். அதில் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ரவீந்தரா சதத்தை அடித்து 112 ரன்கள் குவித்து அவுட்டானார்.
2023 உலகக் கோப்பையில் தனது அறிமுகப் போட்டியிலேயே சதத்தை அடித்த அவர் தற்போது தன்னுடைய அறிமுக சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியிலும் சதத்தை அடித்துள்ளார். இதன் வாயிலாக தனது உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி அறிமுக போட்டியில் சதத்தை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ரவீந்திரா படைத்துள்ளார். மேலும் ஐசிசி தொடர்களில் அதிக சதங்கள் (4) அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன் கேன் வில்லியம்சன், நாதன் அஸ்லே தலா 3 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் டாம் லாதம் 55 ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் கிளன் பிலிப்ஸ் 17*, பிரேஸ்வெல் 11* ரன்கள் எடுத்ததால் 46.1 ஓவரில் 240-5 ரன்களை எடுத்த நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
அதன் காரணமாக நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் இத்தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக நாக் அவுட் செய்யப்பட்டு வெளியேற்றபட்டது. அதே போல ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியாவும் அதிகாரப்பூர்வமாக செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments