Ticker

6/recent/ticker-posts

சர்வதேச கடற்பரப்பில் அத்துமீறல்: உதவிக்கப்பல்களை முற்றுகையிட்ட இஸ்ரேலியப் படைகள்


காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஏந்திச் சென்ற 'குளோபல் சுமுத் ஃபுளோட்டிலா' (Global Sumud Flotilla) அமைப்பின் கப்பல்கள், சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலிய கடற்படையினரால் சட்டவிரோதமாகச் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

இந்த படைநடவடிக்கையின் போது, கப்பலில் உள்ள தன்னார்வலர்களைக் கடத்துவதாகவும் வன்முறையில் ஈடுபடுவதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அச்சுறுத்தியதாக 'X' தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், உதவி மிதவைப்படையைச் சேர்ந்த 11 கப்பல்களுடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

அதேவேளையில், இக் கப்பல்களில் ஏழு கப்பல்களைத் தாங்கள் இடைமறித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அங்கு நிலவும் சூழல் குறித்துப் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இஸ்ரேலின் இந்தச் செயல் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்று குறிப்பிட்ட அந்த அமைப்பு, இப் பிரச்சினையில் உலக நாடுகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. 

உதவிக்கப்பல்களைப் பாதுகாப்பதோடு, இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு அந்த நாட்டைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்ரேலிய ராணுவத் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. காசாவிற்குத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில், இச் சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
nambikkai

 


Post a Comment

0 Comments