
வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள அட்-டின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒரே வார்டில் ஆறு புதிதாகப் பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரிதாப சம்பவத்திற்கு குளிரூட்டும் அமைப்பு (Air-conditioning system) செயலிழந்ததே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் (DGHS) தலைமை இயக்குநர் பேராசிரியர் டாக்டர் பிரவத் சந்திர பிஸ்வாஸ், சம்பவத்தைத் தொடர்ந்து மூன்று உயரதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழுவை அவசரமாக அமைத்து, 72 மணி நேரத்திற்குள் முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், சம்பவம் நடைபெற்ற வார்டு கடும் நெரிசலுடனும் மோசமான காற்றோட்டத்துடனும் இருந்ததாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, குளிரூட்டும் அமைப்பு செயலிழந்தபோது மாற்று காற்றோட்ட வசதி இல்லாததே குழந்தைகளின் நிலையை மோசமாக்கியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், குளிரூட்டும் அமைப்பில் எரிவாயு கசிவு அல்லது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். “கவனக்குறைவு உறுதியாக நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சம்பவத்தின் போது அந்த வார்டில் 11 தாய்மார்களும் ஆறு பச்சிளம் குழந்தைகளும் இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரவில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட இரண்டு குழந்தைகள் NICU-க்கு மாற்றப்பட்டு பின்னர் மீண்டும் வார்டுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், அதிகாலை 6 மணிக்குப் பின்னர் அனைத்து குழந்தைகளும் ஆபத்தான நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குழந்தைகள் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டாலும், காலை 6 மணி முதல் 9 மணி நேரத்திற்குள் ஆறு குழந்தைகளும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம், மருத்துவமனைகளின் பாதுகாப்பு தரநிலைகள், அவசரகால வசதிகள் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments