Ticker

6/recent/ticker-posts

தொடரும் கபில சந்திரசேனவின் மரண விசாரணை..! அரவிந்த டி சில்வாவின் மனைவி மூலம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை இன்று(29) கொழும்பு கோட்டை  நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதர முஹந்திரம் ஆகியோரை சாட்சிகளாக அழைக்க வேண்டுமா என்பது குறித்து ஜூன் 2ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கபில சந்திரசேன மரண விசாரணை

நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணை நடைபெற்றபோது, இரு சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.

அவர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்,  “ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குப் பிறகு நீதிமன்றத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் மட்டுமே அவர்கள் வந்துள்ளனர். இதுவரை எந்த அழைப்பாணையும் வழங்கப்படவில்லை” என்று கூறினார்.

இலங்கை வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜீவ் அமரசூரிய, “வழக்கறிஞர்களுக்கும் அவர்களின் கட்சிக்காரர்களுக்கும் இடையிலான ஆலோசனைகள் இரகசியமானவை.

ஆகவே குற்றவியல் நடைமுறைச் சட்டம் 370(5) கீழ் அவர்களின் சாட்சியம் உண்மையில் தேவையா என்பதை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதவான் பொலிஸாரிடம் கேட்டபோது, இரு சட்டத்தரணிகளிடமிருந்தும் ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். 

இடம்பெற்றுள்ள உரையாடல்

மேலும், கபில சந்திரசேன மே 6ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும்,  ஆனால் மே 7ஆம் திகதி அவருக்கு எதிராக புதிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதே நாள் மாலை, ஒரு குழுவினர் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டிற்கு சென்றதாகவும், பின்னர் ரியென்சி அர்சகுலரத்னவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சந்திரசேனவுக்கும் ரியென்சி அர்சகுலரத்னவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல், அரவிந்த டி சில்வாவின் மனைவியின் கைபேசி மூலம் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த உரையாடலில் என்ன பேசப்பட்டது என்பதை தற்போது புலனாய்வாளர்கள் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தொடர்வதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

இரு சட்டத்தரணிகளையும் சாட்சிகளாக அழைக்க வேண்டுமா என்பது குறித்த இறுதி முடிவு ஜூன் 2ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதவான் தெரிவித்துள்ளார்.

tamilwin


 


Post a Comment

0 Comments