Ticker

6/recent/ticker-posts

கல்வி முறையில் அவசர சீர்திருத்தங்கள் அவசியம்!


ஒரு மாணவர் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து, பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்ந்து, இளமானிப் பட்டப்படிப்பை (Bachelor’s Degree) நிறைவு செய்யும் காலப்பகுதி ஏனைய பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு நீடிப்பது இலங்கையில் மிக்க கவலைக்குரிய விடயமாகும். 

தற்போதைய கல்வி நடைமுறையின் கீழ், இலங்கையில் ஒரு மாணவர் தனது முதலாவது பட்டப்படிப்பை நிறைவு செய்யும் போது பொதுவாக 25 அல்லது 26 வயதை அடையும் நிலை காணப்படுகிறது. இது கல்வியின் தரம் அல்லது பாடத்திட்டத்தின் கடினத்தன்மையால் மாத்திரம் ஏற்படுவதல்ல. மாறாக, பரீட்சைகள், பெறுபேறுகள் வெளியீடு, பல்கலைக்கழக அனுமதி மற்றும் சேர்க்கை போன்ற நிர்வாகச் செயற்பாடுகளில் ஏற்படும் தேவையற்ற காலதாமதங்களும் இதற்குப் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கும் (O/L), உயர்தரப் பரீட்சைக்கும் (A/L) இடையிலான நீண்ட கால இடைவெளி, பரீட்சைகள் நடத்தப்பட்ட பின்னர் பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் மாதக்கணக்கான தாமதம், பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் காத்திருக்க வேண்டிய காலப்பகுதி மற்றும் பல்கலைக்கழகங்களில் முறையான கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிப்பதில் ஏற்படும் தாமதங்கள் ஆகியவை அனைத்தும் இணைந்து, ஒரு இளைஞரின் கல்விப் பயணத்தில் பல ஆண்டுகளை வீணடிக்கின்றன.

இந்த நிலை தனிப்பட்ட மாணவரின் எதிர்காலத்தையே பாதிப்பதல்ல; ஒட்டுமொத்தமாக நாட்டின் மனிதவளப் பயன்பாட்டையும் தேசிய உற்பத்தித்திறனையும் பாதிக்கும் ஒரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சினையாகும்.

ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா போன்ற பல நாடுகளில் மாணவர்கள் தங்களது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த பின்னர், குறைந்த காலத்திற்குள் உயர்கல்வியைத் தொடங்கி, பொதுவாக 21 அல்லது 22 வயதிற்குள் தங்களது முதலாவது பட்டப்படிப்பை நிறைவு செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

இதன் மூலம் இளைஞர்கள் குறைந்த வயதிலேயே தொழில்சந்தைக்குள் நுழையவும், நாட்டின் பொருளாதார செயற்பாடுகளில் பங்களிக்கவும், தொழில் முனைவில் ஈடுபடவும் அல்லது முதுகலை மற்றும் பிற உயர் கல்விகளைத் தொடரவும் முடிகிறது.

மாறாக, இலங்கையில் கல்வி நிர்வாகத் தாமதங்கள் காரணமாக இளைஞர்களின் முக்கியமான உற்பத்தி வயதின் ஒரு பகுதி பயனற்ற காத்திருப்பில் கழிகிறது.
ஒரு மாணவர் தனது பட்டப்படிப்பை நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் முன்னதாக நிறைவு செய்து தொழில்சந்தைக்குள் நுழைந்திருந்தால், அந்தக் காலப்பகுதியில் அவர் நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கக்கூடிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

எனவே, கல்வி நிர்வாகத்தில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களால், ஒவ்வொரு தலைமுறையிலிருந்தும் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பல ஆண்டுகால மனிதவள உற்பத்தித்திறன் இழக்கப்படுகிறது.

இது வேலைவாய்ப்பு, வருமானம், வரி வருவாய், தொழில் முனைவு, புத்தாக்கம் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

கல்வி என்பது ஒரு தனிநபரின் முன்னேற்றத்திற்கான கருவி மட்டுமல்ல. அது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான மிக முக்கியமான முதலீடாகும். ஆகவே, கல்வி முறையில் ஏற்படும் ஒவ்வொரு தேவையற்ற தாமதமும், உண்மையில் நாட்டின் மனித மூலதனத்தின் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பாகவே கருதப்பட வேண்டும்.

இந்தப் பிரச்சினையின் மற்றுமொரு முக்கியமான அம்சம் சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்துடன் தொடர்புடையதாகும்.

வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அரசுப் பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருக்கும் காலத்தைத் தவிர்ப்பதற்காக தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைத் தெரிவுசெய்து, குறைந்த வயதிலேயே பட்டப்படிப்பை நிறைவு செய்து தொழில்சந்தைக்குள் நுழைகின்றனர்.

ஆனால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் பெரும்பாலும் அரசுப் பல்கலைக்கழக வாய்ப்புகளை நம்பியிருக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது.

இதனால் அவர்களது கல்விப் பயணம் நீடிப்பதுடன், பெற்றோரை நீண்டகாலம் பொருளாதார ரீதியாக சார்ந்திருக்க வேண்டிய நிலையும் உருவாகிறது.

இது குடும்பங்களின் நிதிச்சுமையை அதிகரிப்பதோடு, இளைஞர்களிடையே எதிர்காலம் குறித்த அச்சம், விரக்தி மற்றும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

எனவே, கல்வி முறையின் இந்தக் கட்டமைப்பு சார்ந்த தாமதங்களை நீக்குவது என்பது வெறுமனே கல்வி நிர்வாகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக அல்லாமல், சமூக நீதியையும் சமமான வாய்ப்புகளையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்பட வேண்டும்.

இலங்கையின் மனிதவள ஆற்றலை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும், இளைஞர்கள் தங்களது திறமைகளை மிகக் குறைந்த வயதிலேயே நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கும் பின்வரும் மூன்று முக்கிய பரிந்துரைகளை அவசரமாகக் கருத்தில் கொள்ளுமாறு எம்.ஏ.சி.எம். ஜவாஹிர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
1. மாணவர்கள் 17 அல்லது 18 வயதிற்குள் தங்களது இடைநிலைக் கல்வியை நிறைவு செய்யும் வகையில், க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் முறையாகவும் தடையற்ற வகையிலும் திட்டமிடப்பட வேண்டும்.

ஒரு பரீட்சை முடிவடைந்த பின்னர் அடுத்த கல்விக் கட்டத்தை ஆரம்பிப்பதற்காக மாணவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை முற்றாகக் குறைக்கப்பட வேண்டும்.

2. நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன், சாத்தியமான பகுதிகளில் விடைத்தாள் மதிப்பீட்டு முறைகளை நவீனமயப்படுத்தி, பரீட்சை பெறுபேறுகளை சில வாரங்களுக்குள் வெளியிடும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் மாணவர்கள் தங்களது உயர்கல்வி மற்றும் தொழில் தொடர்பான அடுத்த கட்ட முடிவுகளை தேவையற்ற தாமதமின்றி மேற்கொள்ள முடியும்.

3. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கும் காலப்பகுதியை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், பல்கலைக்கழகங்களின் ஆரம்பகட்டப் பாடநெறிகள், அடிப்படைப் பயிற்சிகள் அல்லது அறிமுகக் கல்விச் செயற்பாடுகளை முன்கூட்டியே ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட வேண்டும்.
இதன் மூலம், மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் முறையான கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே தங்களது அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவதுடன், பட்டப்படிப்பை நிறைவு செய்யும் மொத்த காலத்தையும் குறைக்க முடியும்.

இலங்கையின் இளைஞர்களிடம் திறமைக்குக் குறைவில்லை. அவர்களிடம் அறிவும், ஆற்றலும், புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் காணப்படுகின்றன. ஆனால், அந்தத் திறமைகளை சரியான நேரத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கு ஏற்ற கல்விக் கட்டமைப்பை உருவாக்குவது அரசின் முக்கியப் பொறுப்பாகும்.

ஒரு மாணவர் 21 வயதிலேயே தனது முதலாவது பட்டப்படிப்பை நிறைவு செய்து தொழில்சந்தைக்குள் நுழையும் வாய்ப்பைப் பெறுவது, அந்த இளைஞரின் தனிப்பட்ட எதிர்காலத்துக்கு மாத்திரமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும்.

இளைஞர்கள் குறைந்த வயதிலேயே தொழில்துறையில் இணைந்தால், அவர்களின் வருமானம் அதிகரிக்கும்; குடும்பங்களின் பொருளாதாரச் சுமை குறையும்; நாட்டின் வரி வருவாய் அதிகரிக்கும்; தொழில் முனைவோர் உருவாகும்; மேலும், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான கால அவகாசமும் விரிவடையும்.
எனவே, “21 வயதில் பட்டதாரி” என்ற இலக்கை இலங்கையின் கல்விக் கொள்கையில் ஒரு தேசிய இலக்காகக் கருத்திற்கொண்டு, அதனை அடைவதற்கான நடைமுறைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய காலம் இதுவாகும்.

இலங்கையின் எதிர்காலம் அதன் இயற்கை வளங்களில் மாத்திரமல்ல; அதன் இளைஞர்களின் அறிவு, திறமை மற்றும் உற்பத்தித்திறனிலேயே தங்கியுள்ளது.

அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் தேவையற்ற பல ஆண்டுகள் காத்திருப்பாக மாறாமல், அவர்களின் கல்விப் பயணத்தை விரைவுபடுத்தி, திறமைகளை நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைப்பதன் மூலம் மட்டுமே இலங்கையை அறிவுசார் மற்றும் போட்டித்தன்மை மிக்க பொருளாதாரமாக மாற்ற முடியும்.

இளைஞர்களை விரைவாகக் கல்வியூட்டி, விரைவாகத் தொழில்சந்தைக்குள் கொண்டுவருவது ஒரு கல்விச் சீர்திருத்தம் மட்டுமல்ல; அது இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தில் செய்யப்படும் முதலீடாகும் என்பதே இக்கோரிக்கையின் அடிப்படை நோக்கமாகும்.

MACM ஜவாஹிர் 

 


Post a Comment

0 Comments