வெற்று வார்த்தை !

வெற்று வார்த்தை !


பாலும் தேனும் நதியாய் ஓடும்
கனவில் மிதந்து
மூழ்கிப் போனார்கள்
எங்கள் மூதாதையர்கள்

" தேர்தல்களினால் அல்ல
வியர்வைத் துளிகளில்தான்
உயரும் வாழ்வு" என
வலியோடு உணர்ந்தார்கள்
எங்கள் பெற்றோர்கள்

" போராட்டமே வாழ்க்கை "என்பதை
ஊர்வலம், வரிசை, காத்திருப்பு
எனும் பட்டறிவால் 
புரிந்து கொண்டோம்
பரிதாபத்திற்குரிய நாங்கள்

"இடைத்தரகர்களோடு தொடர்புடைய
தரமான போட்டிகளிடையே தான்
நமது எதிர்காலம்"
எனும் படிப்பினையின் பயத்தோடு
எங்களின் வாரிசுகள்

எங்கள் வழி காட்டிகளே!

" உண்டி உடை உறைவிடம் "என்பது
"மேலோகம் செல்வதற்கான மந்திரமோ?" 
எனும்
புதிரோடு உலவுகிறார்கள்
உலகம் புரியாதவர்கள்

" அடிப்படைத் தேவைகள் எவை? "
எனும் கேள்விக்கான பதிலையாவது 
அவர்களின் செவிகளில் 
சொல்லி வையுங்கள்
உங்கள் வாழ்நாள் சாதனையாக...

அதுவரை
உங்கள் விரல்கள் சுட்டும்
" சுதந்திரம் " என்பது
வெற்று வார்த்தையே...


Vettai Email-vettai007@yahoo.com 

1 Comments

  1. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்...
    உங்கள் உழைப்பின் அதிசயமாக வெளிவரும் மின்னிதழ் படைப்புகள் எல்லோரையும் எளிதில் கவருகிறது. நிறைய கவிஞர்கள் என்னிடம் முகவரி கேட்கிறார்கள்...
    தொடர்ந்து எனது படைப்புகளுக்கு வாய்ப்பு வழங்கிவரும் உங்களுக்கு
    இதயம் நிறைந்த நன்றிகள்...
    நேசமுடன்...
    ஐ.தர்மசிங்

    ReplyDelete
Previous Post Next Post