வனவாசிகளின் உச்சந்தொட்ட வனத்துப்பாடல்கள், அவர்களது நடனத்தை வெறித்தனமாக்கிக் கொண்டிருந்த வேளை, குள்ளர்கள் செரோக்கியிடம் நாணயக்கட்டினை ஏன் கொடுத்தார்கள், எதற்குக் கொடுத்தார்கள்? போன்ற கேள்விகளால் இர்வினின் மூளை நச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
நடனத்தை அவனது கண்கள் ரசித்துக் கொண்டிருந்தாலும், குள்ளர்களின் நாணயக்கட்டு அவனது கண்முன் தோன்றி சிந்தனையை இறக்கை கட்டிப் பறக்கச் செய்தது.
குகைக்குள் செரோக்கி பத்திரப்படுத்தி வைத்திருந்த புராதன நூலிலிருந்து கலற்றி எடுக்கப்பட்டிருந்த நான்கு பக்கங்கள் கொண்ட இரண்டு தாள்களில் இருந்த விடயங்களுக்காக அந்தக் குள்ளர்கள் அவ்வளவு பெறுமதி வாய்ந்த நாணயத்தாள்களை அள்ளிக்கொடுத்துச் சென்றுள்ளார்கள்!
அந்தக் குள்ளர்கள் யார்?
நூலிலிருந்து அவர்கள் கலட்டிஎடுத்துச் சென்றுள்ள அந்தக் குறிப்புக்களிலிருந்து அவர்கள் எண்ணதான் பண்ணப் போகின்றார்கள்?
கேள்விகளுக்கு மேல் கேள்விகள் இர்வினின் மூளையை அரித்துக் கொண்டே இருந்தன.
அப்பொழுதுதான் வனவாசிகள் தமது உச்சந்தொட்ட வனத்துப்படல்களையும் நடனங்களையும் நிறுத்திவிட்டுத் தமது கிராமம் நோக்கிய பயணத்திற்குத் தயாராகினர்.
நிலாவொளியில் ஆற்றங்கரைப்பகுதி காணப்பட்டபோதிலும், வனப்பகுதிக்குள் ஒளி ஊடறுக்க முடியாதவாறு நெருக்கமாக நீண்டு வளர்ந்திருந்த மரங்கள் காணப்பட்டன. கும்மிருட்டுக்கு ஒளி வழங்க நெருப்புப் பந்தனம் ஏந்திய ஒருவர், பாதையின் இரு மருங்கிலும் காய்ந்திருந்த பண்புற்களுக்கு நெருப்பு மூட்டியவராக முன் செல்லலானார்.
“ஒரிநோகோ”விலிருந்தும் விடை பெற்றுக்கொண்ட மற்றவர்கள், தங்களின் தலைகளில் பொதிகளைச் சுமந்தவர்களாக ஒருவர் பின் ஒருவராக அணிதிரண்டு, அமேசான் வனத்தை ஊடறுத்துத் தமது கிராமம் நோக்கிச் செல்லும் அந்த ஒற்றையடிப் பாதையில் வீராப்புடன் நடக்கலாயினர்.
அவர்களைத் தொடர்ந்தவர்களாக செரோக்கியும் ரெங்க்மாவும் இர்வினையும் அரவணைத்தபடி மெல்ல நடந்து கொண்டிருக்க, இறுதியாக செரோக்கியின் பெற்றோரும் அவர்களைத் தொடர்ந்து ரெங்க்மாவின் பெற்றோரும் நடந்தனர். ரெங்க்மாவின் தந்தை தான் சுமந்து வந்த வில்லுக்கு வேலைவராதா என்று தன் மனதிற்குள் நினைத்தவராக, சுற்று முற்றும் தன் கவனத்தைச் சிதறவிட்டுக் கொண்டே நடந்தார்.
சிறிது தூரம் செல்ல அவர்களது நடையில் தளர்வு ஏற்படத் தொடங்கியது! வனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மிருகங்களின் நடமாட்டமில்லாத – வசதியாக அமர்ந்துகொள்ள இடங்கிடைக்கின்றபோதெல்லாம் அவர்கள் இளைப்பாறிக் கொண்டனர்.
அப்போதெல்லாம் தாம் சுமந்து வந்த அமேசான் கானகத்துப் பழங்களை அவர்கள் இரசித்துப் புசித்துப் பசியாறிக்கொண்டனர்.
(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
தொடர்கதை