திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-27

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-27


குறள் 1050
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

மாப்ள.. ஒழுங்கா வாழாம, வறுமையாகிப் போனவங்க இருக்காங்கல்லா.. அவங்க முழுசா தங்களை துறக்காமல் உயிரோட இருப்பதுல எந்த பயனும் இல்லை. சாப்பிடுத உப்புக்கும் கஞ்சிக்கும் தான் கேடு மாப்ள. 

குறள் 1054
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

மாப்ள.. வச்சுக்கிட்டே இல்லைன்னு, கனவுலகூட நெனைக்காத ஆட்கள் இருப்பாங்க. அவங்ககிட்ட போய், ஒண்ணும் இல்லாத ஒருத்தன், எதையாவது கொடு ன்னு கேக்குறதே, மத்தவொளுக்கு கொடுக்க மாதிரியான சிறப்புடையது மாப்ள. 

குறள் 1057
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

மாப்ளை.. மோசமா பேசாமலும், நக்கல் பண்ணாமலும், இல்லைன்னு வந்தவொளுக்கு, இல்லைன்னு சொல்லாம, பொருளை வாரி வழங்கும் வள்ளல்கள் இருப்பாவொ. இப்படிப் பட்டவொளைப் பாத்தாலே, இரந்து கேட்பவரின் மனசு அப்படியே குளுந்து போவும் மாப்ள. 

குறள் 1071
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

நம்மச் சுத்தி களுசடைப் பயலுவ நெறைய பேரு இருக்கானுவொ மருமவன. பாக்கதுக்கு அப்பிடியே சாதாரண ஆளு கணக்காவே இருப்பானுவொ. 

இப்பிடில்லாம் நல்லவம் மாதிரி பகல் வேசம் போடுத 
கசவாளிப் பயலுவளப் போல வேறெதிலியும் பாக்க முடியாது மருமவன. 

குறள் 1079
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

மாப்ள.. வெள்ளையுஞ் சுள்ளையுமா நாம அலயும் போது நம்மளைப் பாத்தாலுஞ் சரி.. வக வகயா சமயல் செஞ்சு ஆசையா சாப்புடுதத பாத்தாலுஞ் சரி.. அதப் பாத்து வயிறெரிஞ்சு கண்ணு போட ஆயிரம் பேரு நம்மச் சுத்தி இருக்கானுவொ. அவனுவொள்லாம் நொரநாட்டியம் புடிச்ச பயலுவொ மாப்ள. எதாவது குத்தங்கொறை சொல்லிக் கிட்டே இருப்பானுவொ. 

குறள் 1080
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.

நமக்குத் தும்பம் வரும்போது இவொ கூட சேந்து இருந்தோமுன்னா நாம தப்பிச்சுக்கிடலாம். பகைச்சுக்கிட்டு இவொள விட்டு வெளிய வந்தா எக்கச் சக்கம் எடைஞ்சல் வந்திரும்.. எதுக்கு வம்பை வெலை கொடுத்து வாங்கணும். பேசமா அவொ பக்கத்துல இருந்துகிட்டு அவொ சொல்லுததுக்கெல்லாம் அப்படியே தலையை ஆட்டிக்கிட்டு காலத்தை ஓட்டிரவேண்டியது தான். இது மாதிரி நெனய்க்க வெறுவாக்கெட்ட பயலுவ இப்படி அடிமையா இருக்க மட்டுந்தான் லாயக்கு. வேறு எதுக்கும் லாயக்கு படமாட்டானுவொ.(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post