என்னை யாரெல்லாம்
பார்த்து நகர்கிறார்கள்
என்பதை விட
என் அழகை பார்த்து
நகர்பவர் ஏராளம்
எனது சிறகை விரிக்கும்
பொழுதெல்லாம்
பறக்கும் ஆசையை விட
கம்பியின் நெருக்கம்
என்னை சிறகை
விரிக்க விடாது தடுக்கிறது
சுற்றி அமைந்த கம்பிகளின்
சிறிய நெருக்கத்தில் பெரியதாக
தெரிகிறது பறந்து சென்ற
காக்கையின் சந்தோசம்
கூண்டோடு தூக்கிச் செல்லும்
நீங்கள் எங்கள் மனதோடு
தேக்கிய இறகின் ஆசைகள்
எல்லாம் இடம்பெயர்வதை
என்றாவது நினைத்துள்ளீரா
வாரமோருமுறை எனது
சிறகை கத்தரித்து விடும் மனிதா
எங்கள் மனமே கத்தரித்து
துண்டிக்கப்பட்டு கிடப்பதை
ஒருநாளும் கண்டதுண்டா
காக்கைகளே வண்ணத்தை
தெளித்து செல்லுங்கள்
நீராக நனைத்து எம்மை
விரட்டிவிட நேரும்
அந்த மரத்தின் மேல்
தினம் வந்து அமரும் குருவியே
எங்கள் வண்ணங்களை எடுத்துக்கொள்.
உனது சுதந்திர சிறகை மட்டும்
எங்களுக்கு கொடுத்து விடு
எங்கெங்கோ பறக்கும் பறவையின்
மத்தியில் எங்கள் படைப்பு
மட்டும் கண்ணில் கயிறு
கட்டிய நிலையில்
பிறப்பிக்கப்பட்டது போலும்
எங்களின் அடைபட்ட வண்ணச்சிறகுகள்
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
கவிதை