வேலவன் மேல் தான் கொண்ட விருப்பமின்மை, அவர் வைத்து விட்டு சென்ற புகைப்படத்தில் இருந்த மணப்பெண்ணின் வீட்டு விலாசத்தைக் கூட கேட்க விடாமல் தடுத்து விட்டதே என்றும் வருந்தினான். அவ்வளவு தூரம் அவர் சொல்லியதில் நிச்சயம் அந்தப் பெண் மிக நல்லவளாகவே இருக்கக் கூடும் என்ற நம்பிக்கை ஆறுமுகத்தின் மனதில் துளிர்த்தது.
நீட்டிய படத்தை பாராமலே “நான் பார்க்க என்ன இருக்கின்றது? நீங்கள் எது சொன்னாலும் எனக்கு சரி தாத்தா” என்றான் கண்ணன். ஆறுமுகம் நீட்டிய புகைப்படம் மீண்டும் தேவகி தம்பதினர் முன்னாள் மறுபடியும் இடம் பிடித்து கொண்டது.
தொடர்ந்த அமைதியான நாட்களில் இதுவரை நடந்தவைகளை யாரும் பற்றி கலந்து உரையாடவில்லை. தன் மன உறுத்தலுடன் மௌனியான ஆறுமுகம் வந்தவரைப் பற்றி எதுவும் பேச தயாராகவும் இல்லை.
அன்றைய பொழுதின் தேடலில் ஆபிஸ் வேளையில் மும்முரமாக இருந்தான் கண்ணன். காரியாலத்தில் பல பெண்கள் பணியில் இருந்தும் சரண்யாவின் பார்வையும், நடவடிக்கைகளும் மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமாகவே எல்லை மீறுவது போன்றே தோன்றியது கண்ணனுக்கு. அன்று தனக்கு பிறந்ததினம் என்று அனைவருக்கும் ஸ்வீட் வழங்கியவள் கண்ணனின் அருகில் வந்தாள்.
“சார், இன்று எனக்கு பிறந்த நாள், வாழ்த்து சொல்ல மாட்டீர்களா?’ என்ற கொஞ்சலுடன் இனிப்பினை நீட்டினாள்.
“வாழ்த்துக்கள்” என்ற கண்ணன் ஸ்வீட் வேண்டாம் என்று சைகையால் காட்டினான். சரண்யா என்ன நினைத்தாளோ, கொஞ்சம் கூட தயக்கம் இன்றி அவன் கைகளைப் பற்றி இனிப்பை கைகளில் வைத்தாள். அவளின் அத்து மீறிய செயலால் கோபம் கொண்ட கண்ணன் அவளை முறைத்தான்.
“இன்று வேலைகள் முடிந்த பின் எனக்கு வெளியே ட்ரீட் தருவீர்கள், அப்படித்தானே?” என்றாள் இமைகள் படபடக்க. அவளின் ஒவ்வொரு செயலும் ஏனோ அவள் அவசியம் இன்றி தன்னை சாய்க்க நடிக்கின்றாள் என்பது போலவும், அவளின் ஒவ்வொரு அசைவும் செயற்கையாகவுமே தோன்றியது கண்ணனுக்கு.
“சரண்யா, முதலில் நான் உன் முதலாளி என்பதை நினைவில் கொள். பெண்ணாக இருந்து கொண்டு இப்படியெல்லாம் நடக்க உனக்கு வெட்கமாயில்லை” என்று முதல் முதலாக சீறினான் கண்ணன்.
வெட்கம் என்றால் கிலோ விலையென்ன என்று கேட்கும் ரகத்தை சேர்ந்த சரண்யா திகைத்தாள். ‘சாரி சார்’ என்றுவிட்டு மெதுவாக நழுவினாள்.
(தொடரும்)
Tags:
தொடர்கதை