Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-130


செரோக்கியும் ரெங்க்மாவும்  'கப்பச்சோனா'வை மெல்ல உறிஞ்சிக்கொண்டிருக்கும்போது,

"எக்ஸ்கியூஸ்மீ"

என்ற வார்த்தை கதவுக்கப்பாலிருந்து கேட்டது.

ஏற்கெனவே பதிலுக்குத் தயார் நிலையில் இருந்ததுபோல,

" எஸ் கமிங்" என்று இர்வின் குரல் கொடுத்ததும்,

கபின் கதவு கிரீச்சிட்டுத் திறந்து கொண்டது. 

இர்வினின்  உபசரிப்பில்  மனம் திளைத்துப்போயிருந்த செரோக்கியும் ரெங்க்மாவும்  ஒருசேர தலை நிமிர்ந்து பார்க்கலாயினர்!

சற்று உயரமான மெலிந்த உடல்வாகு கொண்ட  ஓர்  உருவம், தனது கழுத்தில் மெல்லிய நார் ஒன்றில் அட்டை ஒன்றைத் தொங்கவைத்துக்கொண்டு, இர்வினின் அருகில் வந்து நின்றதை அவர்கள்  பார்த்தனர்.

இயற்கையாக எமக்கு விதித்தவற்றில் தகுதி, தராதரம், பண்பாடு பார்த்தெல்லாம் தரம் பிரிக்க முடியாத நிலைகொண்ட வாழ்வொன்றை  வாழ்ந்துகொண்டிருக்கும் பிரத்தியேக நாகரிகமொன்றிற்குச் சொந்தக்காரர்களான இவர்களுக்கு நகரத்து நாகரிகம் புதினமானதாகவும், புதிரானதாகவும் இருந்ததில் வியப்பில்லை!

ரசனைகளால், உணர்வுகளால், நேசங்களால் இயல்பாக அமைகின்ற உறவுகளை வாழ்வோடு இணைத்துக்கொள்ள, நகரத்து நாகரிகம் சில அடிப்படை விடயங்களைத் தமக்குள் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளது என்பதை செரோக்கி இப்பொழுது எளிதில் புரிந்து கொண்டான்!

"இம்முறை அட்டைப்படத்தில் இவர்களை இடம்பெறச் செய்வோம். மரவேடிக்குச்சென்று இயற்கையாக இவர்களின் படமொன்றை எடுத்து வாருங்கள்! 

"இப்படியே இருந்தால் போதுமா?"

பணியாளின் கேள்விக்கு இறுக்கமான இர்வின் சொன்னான்.

"இப்படியல்ல, இவர்கள் இவர்களாகவே இருக்கட்டும் "

புரிந்துகொண்ட பணியாளின் பதில்

"சரி!" என்ற ஒன்றால் மட்டுமே நிறைவு பெற்றது.

பணியாள் அங்கிருந்து நகரமுன்னர், இர்வின் எல்லாவற்றையும் செரோக்கிக்கும் ரெங்க்மாவுக்கும் புரியும் மொழியில் விளங்க வைத்தான்.

தன் நண்பனிடமிருந்து விடைபெற்றுக் கொண்ட செரோக்கி,  ரெங்மாவை அழைத்துக்கொண்டு பணியாளைப் பின்தொடர்ந்தான்.

வேறொரு கபினுக்குள் நுழைந்த பணியாள், அவர்கள் இருவரையும் அங்கு அமரச் செய்துவிட்டு, கருவி ஒன்றை எடுத்து, அதனைத் திறந்து, அதற்குள்ளிருந்து ஏதோ ஒன்றை வெளியில் எடுத்து,  அதே  மாதிரியான வேறொன்றை அதற்குள் திணித்துவிட்டு, கருவியைப் பட்டென  மூடினான்.

அது ஒரு புகைப்படக்கருவி என்பதும், அதற்குள்ளிருந்து வெளியே எடுத்ததும், உள்ளே மறுபடி சொறுவியதும் ஒரு 'படச்சுருள்'தான் என்பது செரோக்கிக்கும் ரெங்க்மாவுக்கும் தெரியவாய்ப்பில்லை!
(தொடரும்)






Post a Comment

0 Comments