திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-79

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-79


குறள் 794
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

எந்த ஒரு கெட்ட பேரும் நமக்கு வந்திறக்கூடாதுன்னு எச்சரிக்கையோட நடந்துகிட்டு இருக்க நல்ல குடும்பத்து ஆளுங்களோட நட்பை எந்த வகையிலாவது பெற வேண்டும். 

குறள் 796
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

தம்பி.. நமக்கு கேடு எதும் வந்துச்சுன்னு வச்சுக்கோயேன். அதுகூட ஒரு நல்லதுக்குத் தான்டே.. நம்ம கூட இருக்கவனுவொ எல்லாரும் எப்படிப்பட்டவனுவொன்னு கண்டுபிடிக்க அது ஒரு அளவு கோலா இருக்கும் தம்பி. 

குறள் 798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு

மாப்ள.. நம்ம நெனப்பு எப்பமும் நல்லதாவே இருக்கணும். நம்மகிட்ட இருக்க உற்சாகத்தை கொறைய்க்க மாதிரி உள்ள எதையும் நெனைய்க்கக் கூடாது. 

அது மாதிரி தான், நமக்கு இக்கட்டுன்னு ஒண்ணு வரும் போது, நம்மை விட்டுட்டு ஓடிருத ஆளுங்களை நம்ம பக்கத்துல வச்சிருக்கக் கூடாது  மாப்ள. 

குறள் 842 
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.

தம்பி.. கூறு கெட்ட குப்பான் ஒருத்தன், என்னவோ தாந்தான் பெரிய வள்ளல்ங்க நெனைப்புல, மகிழ்ச்சியா ஒரு பொருளைஅடுத்தவனுக்குக் கொடுக்காமுன்னா, அது எதுனால தெரியுமாடே.? எல்லாம் அந்த பொருளை வாங்குதவனோட நல்ல காலம் தான்டே! 

குறள் 843 
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

அறிவே இல்லாதவனுவொ, அவனுவொளுக்கான வேதனையை அவனுவொளே தேடிக்கிடுவானுவொ. 
இ்ந்த மாதிரி வேதனையை எதிரிங்களால கூட தர முடியாது.
(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post