சுமந்திரன் ஐயா அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

சுமந்திரன் ஐயா அவர்களுக்கு ஒரு திறந்த மடல்



ஐயா அவர்களே !
முஸ்லிம்களின் கலாச்சார உடையான, முழு உடம்பையும் அழகாக மறைக்கக்கூடடிய , பெண்களுக்கு உரித்தான, உடையுடன் பாடசாலைக்கு சேவைக்காக வந்த ஒரு ஆசிரியையை ஒரு பெண்  அதிபர் தடுத்த  கவலையான சம்பவம் சில காலங்களுக்கு முன் நம் நாட்டில் நடந்தது.

நன்னடத்தை,  நற்பண்பு,  நல்லொழுக்கம் போன்றவற்றை போதிக்கும்,  அறிவின் ஆலயமாக திகழும் ஒரு பாடசாலையில், அதிலும் வருங்கால சமூகத்திற்கு அறிவின் தாயாக திகழும் ஒரு பெண் அதிபர் இவ்வாறு நடந்து கொண்டதன் பின்னணி ஏது  என்பதுதான் புரியாமல் இருப்பதோடு ஒரு புதிராகவும் உள்ளது.

மேலும் இச்சம்பவமானதுஒரு சமூகத்தின் உரிமையை  பாதத்திற்கு கீழே போட்டு மிதித்த ஒரு சம்பவமாக கருதப்பட்டாலும,  தனி ஒரு நபரின் கைகூலிச் செயற்பாடுகளுக்கு ஒரு சமூகம் பொறுப்பல்ல என்பதையும், இதை தமிழ் சமூகம் அங்கீகரிக்கவில்லை என்பதையும் நாம் நான்கு அறிவோம்.

நிலமை இவ்வாறிருக்க.ஐயா அவர்களே! தாங்கள் இலங்கையில் மூவின சமூகத்திற்கு மத்தியிலும்ஒரு படித்த  சிறந்த பண்புள்ள பிரஜையாக திகழ்வதை முதற்கண் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இதற்கான காரணம் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் நீதி நேர்மை  ஒற்றுமை சமத்துவம் சம உரிமை என்பவற்றிற்காக குரல் கொடுத்து வருகின்றீர்கள்.

இது போக ஆளும் அரசாங்கத்தின் கண்டிப்பான போக்கு, 
அடக்குமுறை,  சர்வாதிகாரம்,  இனவாதம்போன்றவற்றிற்கு  நெஞ்சை நிமிர்த்தி அஞ்சாது குரல் கொடுப்பவர்களில் தாங்களும் ஒருவர் என்பதையும் இலங்கையின் மூவின சமூகமும் மறந்துவிடவில்லை. 

இதற்கு மத்தியில் ஆட்சிக்காக அதிகாரத்திற்காக இலங்கையில் விதைக்கப்பட்ட இனவாதம்,  விருட்சமாய் வளர்ந்த காலகட்டத்தில் அதற்கு எதிராக முன் நின்று குரல் கொடுத்ததில் ஐயா அவர்களும் ஒருவர் என்பதை பெருமையுடன் பறைசாற்ற விரும்புகின்றேன்.

மேலும் முஸ்லிம் சமூகத்திற்கு இந்நாட்டில் கஷ்டங்களும் இன்னல்களும் ஏற்ப்பட்ட போதும்,  உலமாக்கள், முஸ்லிம் எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் சட்டத்தரணிகள் அநீதமாக சிறைப்படுத்தப்பட்டபோதும் தாங்கள் வீரமாக நின்று குரல் கொடுத்ததையும், வழக்குகளில் வாதாடியதையும்   நாம் மறந்து விடவில்லை. 

இவ்வாறான ஒரு நிலையில் ஒரு சமூகத்திற்கு  உறித்தான அதிலும் தாய் குலத்திற்கு  மிக மிக பாதுகாப்பானஉரிமையுடைய ஆடையை அணிந்து சென்றதன் பின்னணியில் உள்ள ஒரு நீதிமன்ற வழக்கிற்க்கு,  ஒரு சமூகத்தின் உடையின் உரிமையை பறிக்கும் விதமாக நடந்து கொண்ட ஒரு வழக்கில் தாங்களே பங்கைகேற்றதை இட்டு கவலை அடைவதோடு முஸ்லிம் சமூகத்தின் மனதை சற்று  நெருடிச் செல்கின்றது என்பதையும் மனவருத்தத்தோடு தெரிவிக்க விரும்புகிறேன்.

இனவாதத்திற்கு எதிராகவும், சம உரிமை சமத்துவம் போன்றவற்றிற்காக அஞ்சா நெஞ்சத்துடன் குரல் கொடுக்கும் ஐயா அவர்கள் இவ்வாறான விடயங்களில் ஒரு பக்கமாக  ஈடுபடுவது ஏன் என்பது தான் தெரியவில்லை.

வழக்காடுவது தங்களின் ஊதியமாகவும் உரிமையாகவும் காணப்பட்ட போதிலும் ,சம உரிமை சகவாழ்வு சமத்துவம், சமூக ஒற்றுமை போன்றவற்றுக்காக இதையும் பல தடவைகள் தியாகமாக நிறைவேற்றியதையும் நாம் அறிவோம்.

மேலும் தமிழ் சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்புக்களுக்கு மருந்தளித்து, நல்லிணக்கம் நட்புறவு, சாந்தி சமாதானம்,சகவாழ்வு சமத்துவம்,  போன்றவற்றின் சமிக்ஞை தூணாக செயற்பாடுகளினால் செயற்படுவதையும் நாம் மறந்துவிடவில்லை.

நாட்டில் தீய சக்திகளால் விதைக்கப்பட்ட இனவாதத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டு கொண்டிருக்கும் இவ்வேலையில், இனவாதத்தை கையில் எடுத்த மக்களே இனவாதத்தை சுடுகாட்டை நோக்க்கி நகர்த்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தாங்கள்போன்ற நற்பண்புள்ள நன்மக்கள் இவ்வாறானவர்களுக்கு ஆதரவாக வழக்காடுவது, இவ்வாறானவர்களுக்கு துனையாக நிற்பது போன்ற ஒரு பிரமிப்பையும் புத்துயிரையும்  ஊக்குவிப்பையும் அவர்களுக்கு உண்டுபண்ணும் என்றே கருதுகின்றேன். 

எனவே நாம் இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் கடந்து வந்த கரடுமுரடான பாதைகளை மீண்டும் சந்திக்கக் கூடாது என்பதே அனைத்து சமூகங்களினதும் அபிலாஷையாகும்.

ஆசியை அதிபரை தாக்கினாரா ?  அல்லது அதிபரை ஆசியை தாக்கினாரா என்பது இரண்டாவது விடயம். இதில் யார் குற்றவாளி யார் நிரபராதி என்பதை வாத விவாதங்களின் பின் கெளர நீதீமன்றத்தினால் முடிவு செய்யப்படும்.

குற்றவாளி தண்டிக்கப்படவேண்டும். அதில் எச்சமூகத்திற்கும் 
மாற்றுக் கருத்தில்லை. 

ஆனால் அபாயா உடையுடன் பாடசாலையினுள் நுழையக்கூடாது என்பது அதிபர் உற்பட அவர் சார்ந்த குழுக்களின் போராட்டத்தின் கருப்பொருளாகவும் , வெளிப்படையான கோசமாகவும் காணப்பட்டது. 

மேலும் இனி வரக்கூடிய காலங்களில் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஏவிவிடக்கூடிய  தீயசக்திளையும், சதிகளையும் ஒற்றுமையாக நின்று முறியடிக்க வேண்டும் என மூவின சமூகங்களும் கைகோர்துள்ள இச்சந்தர்ப்பத்தில், சமூகங்களுகிடையில் கோபங்களையும் குரோதங்களையும் ஏற்படுத்துபவர்களுக்கு சமூகத்தலைவர்கள்,  சமூக முக்கியஸ்தர்கள் ஆதரவாக செயல்படுவது மீ்ண்டும் அவர்களின் காரியங்களை அவர்கள்
 செயல்படுத்துவதற்கு ஊன்று கோலாக அமையும் என நினைக்கிறைன்.

எனவே இனிவரும் காலங்களில் இரு சமூகங்களுக்கும் இடையிலான காணவேண்டிய பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு,  எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் ஒரு ஒற்றுமையின் பாலமாக தாங்கள் செயல்படுவீர்கள் என விண்ணைத் தொடும் நம்பிக்கை வீண் போகாது என்ற உறுதியான நம்பிக்கையோடு முடிக்கிறேன்.

தாழ்மையுடன்
என்றும் நன்றியுள்ள
பேருவளை ஹில்மி 



 



Post a Comment

Previous Post Next Post