ஜெனரேட்டரில் சிக்கிய தலைமுடி..திருவிழாவுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்: சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஜெனரேட்டரில் சிக்கிய தலைமுடி..திருவிழாவுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்: சோகத்தில் மூழ்கிய கிராமம்

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் விச்சந்தாங்கல் என்ற கிராமம் உள்ளது. இங்கு காண்டீபன் - லதா தம்பதியர் உள்ளனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், அதில் கடைசி மகள் காஞ்சனாவை சென்னையில் உள்ள சரவணன் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்து இவர்களுக்கு 13 வயதில் லாவண்யா என்ற சிறுமியும், 9 வயதில் புவனேஷ் என்ற மகனும் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சரவணன் - காஞ்சனாவுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த காஞ்சனா தற்கொலை செய்துகொண்டார். பின்னர் குழந்தைகளை தனியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை என்று கூறி, அவரது தாத்தா-பாட்டி (காண்டீபன் - லதா) வீட்டில் விட்டுள்ளார் சரவணன்.

இந்த நிலையில் விச்சந்தாங்கலிலுள்ள அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழைமை திருவிழாவின் கடைசி நாள் விழா நடைபெற்றது. அப்போது இரவு சாமி உற்சவ ஊர்வலத்திற்கென மாட்டு வண்டியில் சாமி அலங்கரிக்கப்பட்டு வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அவை ஒளிர்வதற்கென மினி ஜென்ரேட்டர் வைக்கப்பட்டு சாமி புறப்பாடானது மேள தாளங்கள் முழங்க நடைபெற்றது.

அப்போது சிறுமி லாவண்யாவை அவரது தாத்தா வீட்டுக்கு போக சொல்லியுள்ளார். இருப்பினும் சிறுமி வீட்டுக்கு செல்லாமல் அந்த மாட்டு வண்டியின் பின்புறத்தில் ரகசியமாக அமர்ந்துள்ளார். தொடர்ந்து திருவிழாவை வேடிக்கை பார்த்து வந்த சிறுமியின் தலைமுடி அருகிலிருந்த ஜெனெரட்டரில் சிக்கியுள்ளது. தொடர்ந்து பலமாக அவரது முடி அதில் சிக்கி பலத்த காயமடைந்தார் சிறுமி.

இதையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாகரல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி, பின்னர் உடலை உரியவர்களிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயில் திருவிழாவின்போது 13 வயது சிறுமியின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
kalaignarseithigal



 



Post a Comment

Previous Post Next Post