Ticker

6/recent/ticker-posts

ஏமனுக்குள் புகுந்து இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகள் மீது அமெரிக்கா, பிரிட்டன் பல்முனை தாக்குதல்


அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது பல்முனை தாக்குதல்கள் நடத்தியுள்ளன.

கடந்த நவம்பவர் மாதம் முதல், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கான எதிர்வினையே இது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மக்களை பாதுகாக்கவும், சர்வதேச வர்த்தகத்தை உறுதி செய்யவும், இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்த தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களுக்கு நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பஹ்ரைன் ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏன் செங்கடலில் தாக்குதல்கள் நடைபெறுகின்றன?

கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கியதை அடுத்து, ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் தாக்குதல்களை அதிகரித்தனர். இந்த தாக்குதல்களை நடத்தும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர். ஏமனின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட அனைத்துக் கப்பல்களும் உண்மையில் இஸ்ரேலை நோக்கிச் சென்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இரானின் ஆதரவு பெற்றதாக அறியப்படுகிறது.

ஏமனில் எங்கெல்லாம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன?

அக்டோபர் மாதம் முதல் செங்கடலில் சர்வதேச கடல்வழித்தடத்தில் சென்ற 27 கப்பல்களை ஹூத்திகளை தாக்கியுள்ளன என்றும் இதனால் 55 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் ராயல் விமானப் படையின் போர்விமானங்கள், குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலை நடத்த உதவி புரிந்ததாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் வரையறுக்கப்பட்டவை, அவசியமானவை மற்றும் தற்காப்புக்கு தேவையான அளவில் நடத்தப்பட்டவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடல் வழி சுதந்திர பயணத்துக்கும், தடையில்லா வர்த்தகத்துக்கும் பிரிட்டன் துணை நிற்கும் என்று கூறியிருந்தார்.

சைப்ரஸிலிருந்து பறந்த, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் நான்கு டைஃபூன் ஜெட் விமானங்கள் இரண்டு ஹூத்தி இலக்குகள் மீது குண்டு வீசின.

இந்த தாக்குதல்கள் ஏமனின் தலைநகர் சனா, செங்கடலில் உள்ள ஏமனின் துறைமுகம் ஹுதயா, தமர் நகரம், சாதா நகரம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. ஜனவரி 11ம் தேதி காலை 2.30 மணியளவில் அமெரிக்க போர்க்கப்பல் தோமாஹாக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ஜெட் விமானங்கள் 12க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து தாக்கின என்று தாக்குதல்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

செங்கடலில் வர்த்தகப் போக்குவரத்தை சீர் செய்ய இந்த தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹூத்தி வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹுசைன் அல்-எஸ்ஸி, இந்த அப்பட்டமான தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டு ராணுவ நடவடிக்கைகள் ஹூத்திகளை வலுவிழக்க செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்திருந்தார்.

ஹூத்திகளின் ஆளில்லா விமானம், ஆளில்லா கப்பல், தரை வழி தாக்குதல் நடத்தும் ஏவுகணை, கடலோர மற்றும் வான்வழி கண்காணிப்பு கருவிகள் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கியுள்ளார்.

உடல் நலம் குன்றியுள்ள ஆஸ்டின் , மருத்துவமனையிலிருந்து இந்த தாக்குதல்களை நேரடியாக மேற்பார்வையிட்டார்.

ஹூத்திகளுக்கு எதிரான பத்து நாடுகள் கூட்டறிக்கை

ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய அரசுகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் ஒத்த கருத்து இருப்பதாக கூறும் அந்த அறிக்கை, கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், செங்கடலில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஹூத்திகள் நிறுத்த வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டியது.

ஹூத்திகள் மீது நடத்தப்படும் பல்முனை தாக்குதல்கள், தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த தற்காப்புக்காக நடத்தப்படுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“உலக மிக முக்கியன் கடல்வழிபாதைகளில் ஒன்றில் சர்வதேச வர்த்தகம் மற்றும் சர்வதேச மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்துலாக இருக்கும் ஹூத்திகளின் திறன் மற்றும் சக்தியை வலுவிழக்க செய்யவே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என்று அந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. செங்கடலில் நிலவும் பதற்றத்தை தணித்து நிலைமைகளை சீராக்கும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூத்திகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களுக்கு, அவர்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

சவுதி அரேபியா என்ன சொல்கிறது?

இதற்கிடையில், செங்கடலில் தாக்குதல்களை அதிகரிக்க வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது. அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கடலில் பாதுகாப்பான சூழல் நிலவுவதன் முக்கியத்துவத்தை சவுதி அரேபியா உணர்கிறது. ஏமனில் நடைபெறும் பல்முனை தாக்குதல்கள் குறித்து சவுதி அரேபியா கவலைக் கொள்கிறது. எனவே அமெரிக்கா மற்றும் அதன் உடன் நிற்கும் நாடுகள் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

bbc


 



Post a Comment

0 Comments