
மலேசியாவில் நடுவானில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில், சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகியுள்ளனர். இது மலேசியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராணுவ தினத்தையொட்டி, மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெர்க் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுப்பட்டன. அப்போது திடீரென்று இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகின. புகையை உருவாக்கியப்படி இரண்டு ஹெலிகாப்டர்களும் தரையில் விழுந்து நொறுங்கின. இந்த விபத்தில் இரு ஹெலிகாப்டர்களில் பயணம் செய்த கடற்படை வீரர்கள், ஊழியர்கள், விமானிகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்திய நேரப்படி, இன்று காலை 9:30 மணியளவில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. மலேசியாவின் 90வது கடற்படை நாளுக்கான ஒத்திக்கை நடத்தப்பட்டது. இதில் RMN கடல்சார் ஆப்ரேஷன் ஹெலிகாப்டர் (HOM –AW139) மற்றும் RMN FENNEC ஹெலிகாப்டர் ஆகியவை விபத்துக்குள்ளானதாக ராயல் மலேசியாவின் நேவி RMN உறுதிசெய்தது.
இந்த இரண்டு விமானங்களில் மொத்தம் இரண்டு குழுவைச் சேர்ந்த 10 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரின் ரோட்டரை வெட்டி தள்ளியிருக்கிறது. ஆகையால், கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் நிலத்திலும், மற்றொரு விமானம் நீச்சல் குளத்திலும் விழுந்தன. உடனே அந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்களும், மீட்பு குழுவினர்களும் விரைந்தனர். அதில் இருந்தவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று போராடினர். ஆனால் அந்தப் போராட்டம் தோல்வியிலேயே முடிந்தது.
இந்த சம்பவம் குறித்து மலேசியா அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் இரண்டு விமானங்களும் மோதிக்கொண்டு விழும் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் இருக்கும் காட்சிகள் பார்ப்பவர்களைப் பதைப்பதைக்க வைக்கிறது.
kalkionline

.gif)




0 Comments