போட்டியில் தமிழக வீரரும் இருக்காரு.. விராட், ரோஹித் இடத்தை அந்த 2 பிளேயர்ஸ் நிரப்புவாங்க.. ஸ்ரீதர் பேட்டி

போட்டியில் தமிழக வீரரும் இருக்காரு.. விராட், ரோஹித் இடத்தை அந்த 2 பிளேயர்ஸ் நிரப்புவாங்க.. ஸ்ரீதர் பேட்டி


ஐசிசி 2024  டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான  இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அந்த வெற்றியுடன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். அதில் கடந்த 10 வருடங்களாக பேட்டிங் துறையில் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக எதிரணிகளை சொல்லி அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய விராட், ரோஹித் ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. 

இருப்பினும் 35 வயதை கடந்து விட்ட அவர்கள் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிட்டு விடை பெறுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் டி20 அணியில் அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்கு ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் தயாராக உள்ளனர்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்பும் திறமை தமிழக வீரர் சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில்லிடம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். குறிப்பாக வருங்கால கேப்டன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் விராட், ரோஹித் இடத்தை இப்போதே நிரப்பத் துவங்கி விட்டதாக தெரிவிக்கும் ஸ்ரீதர் இது பற்றி பேசியது பின்வருமாறு. 

“இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால், கில் ஆகிய இருவருமே அசத்தினார்கள். அந்த இருவருமே டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் தங்களுடைய இடத்தை பிடித்துள்ளனர். என்னைப் பொறுத்த வரை சுப்மன் கில் ஆல் ஃபார்மட் பிளேயர். அவர் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் ரோகித் சர்மாவின் துணை கேப்டனாக செயல்பட உள்ளார்”

“2027 உலகக் கோப்பைக்கு பின் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் கேப்டனாக இருப்பதையும் பார்க்கலாம். ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு நிறைய போட்டி இருக்கிறது. குறிப்பாக அபிஷேக் ஷர்மா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அவருக்கு போட்டியைக் கொடுக்கின்றனர். ஆனால் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் சதமும் இரட்டை சதமும் அடித்ததை நாம் பார்த்தோம்”

“எனவே பெரிய இன்னிங்ஸ் விளையாடும் திறமை அவரிடம் இருக்கிறது. அதே போல ஜெய்ஸ்வால் டி20 கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரிலும் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரிலும் அசத்தினார். ஆனாலும் அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன் ஆகியோர் அவரைச் சுற்றி 2 தரமான துவக்க வீரர்களாக உள்ளனர். எனவே அவர்களின் வாய்ப்பு ஃபார்மை பொறுத்து அமையும். ஆனால் சுப்மன் கில் இந்தியாவின் முன்னணி வீரராக இருப்பார்” என்று கூறினார்.

crictamil



 



Post a Comment

Previous Post Next Post