7 நாள்.. இந்தியரை வெச்சே 27 வருஷம் கழிச்சு இந்தியாவை சாய்ச்சுருக்கோம்.. ஜெயசூர்யா பகிர்ந்த பின்னணி

7 நாள்.. இந்தியரை வெச்சே 27 வருஷம் கழிச்சு இந்தியாவை சாய்ச்சுருக்கோம்.. ஜெயசூர்யா பகிர்ந்த பின்னணி


இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 0 (3) என்ற கணக்கில் இலங்கை வென்றுள்ளது. அதனால் 27 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரை வென்று இலங்கை அசத்தியுள்ளது. 

அத்துடன் 2010க்குப்பின் இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளிலும் வென்று இலங்கை அசத்தியுள்ளது. அதுபோக ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. மறுபுறம் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடுவதற்கு கூட இலங்கை தகுதி பெறவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வலுவான இந்தியாவை 27 வருடங்கள் கழித்து தோற்கடித்தது இலங்கை ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தொடரில் இந்தியாவை தோற்கடிப்பதற்கு ராஜஸ்தான் ஐபிஎல் அணியின் துணைப் பயிற்சியாளர் ஜூபின் பாருச்சா உதவியதாக இலங்கையின் பயிற்சியாளர் சனாத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். மேலும் தற்காலிகமாக பொறுப்பேற்ற தாம் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து தொடருடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக உள்ளதாக ஜெயசூர்யா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. 

“எனக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஜூபின் பாருச்சா கிடைத்தார். இங்கே வந்து அவர் 7 நாட்கள் பயிற்சி ப்ரோக்ராம் எடுத்தார். அவரிடம் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். குறிப்பாக எப்படி நீண்ட இன்னிங்ஸ் விளையாடுவது, எப்படி ஒரு பேட்ஸ்மேன் 2 – 3 மணி நேரம் பேட்டிங் செய்வது போன்றவற்றை கற்றுக் கொண்டோம். அது எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தது”

“திறமையான எங்கள் வீரர்களுக்கு தன்னம்பிக்கை மட்டுமே தேவைப்பட்டது. நன்றாக பேட்டிங் செய்து, நன்றாக பந்து வீசினால் தன்னம்பிக்கை தாமாக வந்து விடும். நாளின் இறுதியில் நாங்கள் உலகின் நம்பர் ஒன் அணியை வீழ்த்தியுள்ளோம். இலங்கை தற்சமயத்தில் நல்ல பயிற்சியாளரை பார்க்கிறது. நான் இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடருக்காக மட்டுமே வந்தேன். உயர்தர செயல்பாடுகளுக்காக நான் இருப்பேன்”

“இலங்கை கிரிக்கெட்டுக்கு நான் தொடர்ந்து ஆதரவு கொடுப்பேன். எங்கள் வீரர்களுக்கு தேவையான உதவியும் பயிற்சியாளர்களுக்கு தேவையான வசதியையும் செய்து கொடுக்கும் இலங்கை வாரியத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் அவர்கள் நல்ல பயிற்சியாளரை கொண்டு வந்து நம் இளம் வீரர்களை முன்னேற்றி இந்த வெற்றி நடையை தொடர்வார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். அந்த வகையில் 17 முதல் தரம், 11 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட இந்தியாவின் மும்பையை சேர்ந்த ஜூபின் பாருச்சா வைத்து இத்தொடரில் இந்திய அணியை இலங்கை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

crictamil



 



Post a Comment

Previous Post Next Post