
கல்லடிவாரத்தை இர்வின் எட்டிப் பார்த்த போது, தெரிந்த பழுப்புநிறக் கேசத்தைக் கொண்ட வயதான அந்த மனிதன் யார்?
வனத்துக்குள் வாழும் குறிப்பிட்ட சிலரைத் தவிர அநேகமானோர் உலகில் எங்காவது இருந்து வந்து திரும்பிச் செல்ல முடியாமல் மாட்டிக் கொண்டு, வனவாழ்க்கையில் தஞ்சம் கொண்டு வாழ்பவர்கள்!
அந்த வகையில் கல்லடிவரத்தில் தனித்து வாழ்ந்து வரும் யோகியாரும், ஒரு காலத்தில் கிரேக்கத்து "கிரீடீ” தீவின் 'கராபாஷா' பகுதியிலிருந்து “அமேசான்” வனத்தைச் சுற்றிப் பார்க்க வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.
யோகியாரின் தந்தை கராபாஷாப் பகுதியில் “இஸ்ம்” எழுதுவதிலும், “பஆல்” பார்ப்பதிலும் பிரசித்தி பெற்றவராவார். அப்பகுதியில் எவராவதொருவர் மருத்துவரால் சுகப்படுத்த முடியாத நிலையில் கைவிடப்பட்டால் யோகியாரின் தந்தையை நாடியே நோயாளியை அழைத்து வருவார்கள்.
அவர் வழங்கும் “இஸ்மை”ப் பயன்படுத்தி நோயிலிருந்தும் மீட்சி பெற்றோர் அதிகம்! 'கராபாஷா' பகுதியில் எங்காவது, ஏதாவது பொருள் காணாமற்போனால் “பஆல்” பார்ப்பதன் மூலம், அதனைக் கண்டு பிடித்துக் கொடுப்பதில் பிரசித்தியும் பெற்றிருந்தார் அவர்!
யோகியார் தனது சிறு பிராயத்தில் தந்தையின்
நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்ட வராகவும், தந்தை செய்கின்றவற்றை நுணுக்கமாகக் கவனித்து வருபவருமாகவும் இருந்துள்ளார்! அவரின் துரதிர்ஷ்டமோ அல்லது நல்லதிர்ஷ்டமோ, தான் சிறு பிள்ளையாய் இருக்கும்போது குடும்பத்தாரோடு வனத்தைப் பார்க்கவந்த அவர், பெரிய கல்லிலிருந்து சறுக்கி விழுந்து விட்டார். இவ்வாறு சறுக்கி விழுவோர் உயிர் பிழைப்பதில்லை என்று வனவாசிகள் குறிப்பிட்டதை நம்பிய 'கராபாஷா' குடும்பத்தினர், தமது பிள்ளையை மீட்கும் முயற்சியில் இறங்காமல், வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டனர்!
இது நடந்து எட்டு தசாப்தங்கள் கடந்துவிட்டது! கல்லடிவாரத்தில் இருப்பவர் யார், எவர் என்று கூட அறியா நிலையில் கானகத்து மக்கள் அவரை யோகியார் என்று அழைக்கலாயினர்.
கல்லடிவாரத்தில் விழுந்த சிறுவனின் உயிருக்கு ஆபத்த நிலையில், அங்கிருந்த முதியவர் ஒருவரால் பராமரிக்கப்பட்டு, அந்த முதியவர் சில காலங்களில் இறந்துவிட, அப்பகுதியில் கிடைத்த பழங்கள், கிழங்குகளை உண்டு, அங்கிருந்த மிருகங்களோடு நட்போடு வாழ்ந்து வந்த சிறுவன், இப்போது முதுமை எய்திவிட்ட நிலையில் வனவாசிகளால் “யோகியார்” என அழைக்கப்பட்டு வருகின்றான்!
யோகம் என்பது சக்தியின் உணர்வு நிலை; சுற்றியுள்ள மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஜடப்பொருட்கள் எல்லாவற்றையும் தங்களின் ஒரு பாகமாக உணர்வதாகும். இது தத்துவமோ, கருத்தோ,
நம்பிக்கையோ அல்ல; மனிதர் உணர்ந்து, தெரிந்து கொள்வதாகும்.
தவறுநிலை இயல்புள்ள புலன்களைச் சாராமல் உண்மையை அனுபவிக்கும் திறனுள்ள மனத்துடன், நேரடி உணரும் ஆற்றல் கொண்டு தியானம் செய்பவர் யோகியார் என்று அழைக்கப்படுவர்.
செரோக்கியைத் தவிர வனவாசிகள் எவரும் யோகியாரை நேரில் கண்டதில்லை!
வனவாசிகளும் யோகியாரும் இந்நாள் வரைக்கும் இங்கிருந்தும் அங்கிருந்தும் உரத்துப் பேசியே உறவாடி வந்த நிலையில், செரோக்கி ரெங்க்மாவுக்காக துணிச்சலோடு கல்லடி வரையில் இறங்கி, அவரை நேரில் சந்தித்த முதலாமவராகின்றான்!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments