
பீகாரில் படித்து அரசு வேலைக்கு முயன்று வந்த இளைஞரை பெண் வீட்டார் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“மரியாதையாக பெண்ணின் கழுத்தில் தாலி கட்டு. இல்லை நீ காலி” என கழுத்தில் கத்தியை வைத்தால் மாப்பிள்ளை கலையிழந்து காணப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை கடத்திச் சென்று கட்டாயத் தாலி கட்டும் சினிமா காட்சிகளைக் கண்டு பழகிப் போன நபர்களுக்கு இது சற்று புதுசுதான் என்றாலும், பீகாரில் சர்வசாதாரணமாக மாப்பிள்ளை கடத்தல் சம்பவங்கள் நூற்றுக்கணக்கில் அரங்கேறுவதாக கூறுகின்றனர் அம்மாநில போலீசார். 90ஸ் கிட்ஸ்களாக இருந்தாலும் அரசு அதிகாரி என்றால் போதும், 'செல்லத்த தூக்கிட்டு வாங்கடா' என அள்ளிச் சென்று திருமணம் செய்து வைக்கும் பீகார் மாப்பிள்ளை கடத்தல் சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி என்ன?.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண்கள் திண்டாடி வருகின்றனர். அதிலும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண சாபம், அவர்களின் வாழ்வில் ஒரு சோக காவியத்தையே உருவாக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பலரும் திருமண வயதைக் கடந்து பெண் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஒரு சிலர் பெண்ணை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. ஆனால், இந்தியாவில் பீகார் மாநிலத்தில் மட்டும் ஏறுக்குமாறான சம்பவம் நடைபெற்று வருகிறது.
அங்கு மணப் பெண்கள் கடத்தப்படுவதில்லை. மாப்பிள்ளைக்குத் தான் டிமாண்ட் அதிகம். திருமண வயதை எட்டிய ஆண் மகனை வீட்டில் வைத்துக் கொண்டு பெற்றோர் வயிற்றில் நெருப்பை கட்டிக் கெண்டு திரிகிறார்கள். வேலைக்கு செல்லும் ஆண் இருட்டுவதற்குள் வீடு வந்துசேர்ந்து விடுவானா? என பெற்றோர் தவியாய் தவித்து வருகின்றனர். அதிலும் அரசு வேலை மற்றும் உயர் கல்வி படித்த மாப்பிள்ளை என்றால் அவ்வளவும் தான். அவரை கத்திமுனையில் கடத்திச் சென்று கட்டாய கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள்.
இதுபோன்ற ஒரு திருமணம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், சமஷ்திபூர் மாவட்டம், பகார் கிராமத்தை சேர்ந்தவர் நிதீஷ் குமார். பட்டதாரியான இவர் போலீஸ் வேலைக்கு தயாராகி வந்தார். இந்த தகவல் பக்கத்து கிராமமான சக்கரஜா அலி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராய் என்பவருக்குத் தெரியவந்துள்ளது. அவ்வளவுதான் நித்திஸ்குமார் தான் தன் பொண்ணுக்கு மாப்பிள்ளை என முடிவு செய்த சங்கர் ராய், "எட்றா வண்டிய?" என கும்பலாக பகார் கிராமத்திற்கு காரில் கிளம்பியிருக்கிறார்
அங்கு முகாமிட்டு நிதீஷ் குமாரின் நடவடிக்கைகளை சங்கர் ராய் குடும்பத்தினர் கண்காணித்து வந்துள்ளனர். அதன்படி கடந்த 7ஆம் தேதி நிதிஷ்குமார் நூலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சங்கர் ராய் குடும்பத்தினர் காரை எடுத்து வந்து நிதிஷ்குமாரை வலுக்கட்டாயமாக காரில் தூக்கி போட்டுக் கொண்டு தங்கள் கிராமத்திற்கு கடத்திச் சென்று விட்டனர். நிதீஷ்குமார் கத்தி கூச்சலிட்டதால், மாப்பிள்ளையை பெரிதாக காயப்படுத்தாமல் லேசான தடியடி நடத்தியிருக்கின்றனர்.
மேலும் "ஊருக்கு போற வர கொஞ்சம் அமைதியா இருங்க மாப்பிள" எனக் கூறி நிதிஷ்குமாரின் வாயில் வலுக்கட்டாயமாக போதை மருந்தை ஊற்றியிருக்கின்றனர். சிறிது நேரத்தில் நிதிஷ் குமார் மயக்கமடைந்து விட்டார். சங்கர் ராய் குடும்பத்தினர் மோர்வாலில் உள்ள கோவிலுக்கு அவரை கொண்டு சென்று புது உடைகளை அணிவித்து மாப்பிள்ளை அலங்காரம் செய்துள்ளனர். மேலும் தங்களது மகள் லட்சுமி குமாரிக்கும் மணப்பெண் அலங்காரம் செய்துள்ளனர். பின்னர் வலுக்கட்டாயமாக நிதீஷ் குமாரை லட்சுமி குமாரியின் கழுத்தில் தாலி கட்ட வைத்தனர்.
அரை மயக்கத்தில் இருந்த நிதிஸ்குமார், தான் என்ன செய்கிறோம் என்பது புரியாமல் தாலியை கட்டி தனக்கே தெரியாமல் கணவனாக மாறி விட்டார். அங்கிருந்த ஒருவர் இந்த கட்டாயத் திருமண கூத்துகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு போதை தெளிந்த நிதீஷ் குமாரை கடத்திச் சென்று தங்களது வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். நூலகத்திற்குச் சென்ற மகன் திரும்பி வராததால் பதறிப்போன நிதிஷ்குமாரன் பெற்றோர் சமஷ்தி பூர் போலீசில் மகனை கண்டுபிடித்து தருமாறு கூறி புகார் அளித்துள்ளனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் தான், திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்துள்ளனர். உடனே சங்கர் ராய் வீட்டிற்கு சென்ற போலீசார் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிதிஷ்குமார் மீட்டனர். தன்னை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டதாக கதறிய நிதிஷ், "புடுச்சு உள்ள போடுங்க சார்" என சங்கர் ராய் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்திருக்கிறார். சார் எல்லாம் முடிஞ்சு போச்சு சார் கல்லானாலும் மனைவி புல்லானாலும்பொண்டாட்டி என நினைத்துக் கொண்டு வாழச் சொல்லுங்க சார் என நியாயம் பேசிய சங்கர் ராய் குடும்பத்தினரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் இதுவரை ஆயிரத்து 224 ஆண்களை இதுபோன்று கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து வைத்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். பீகார் மாநிலத்தில் திருமணமாகாத ஆண்களை அவர்களது பெற்றோர் தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments