
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு ஆறு மாதங்கள் கழிந்த நிலையிலும் கூட, காஸாவில் முழுமையான அமைதி இல்லை!
தொடர்ந்தும் தொடர்ச்சியான தாக்குதல்கள், உதவி வரத்துத்தடைகள், இடப்பெயர்வு மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை காரணமாக மக்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், இந்நெருக்கடிக்கு ஒரு சின்னத் தீர்வாக இருக்கலாம் என்ற நோக்கில், உணவு, மருந்து, மருத்துவ உபகரணங்களை கொண்டு சென்ற குளோபல் சுமூத் ஃப்ளோட்டிலா (Global Sumud Flotilla)வை இஸ்ரேல் கடற்படை இடைமறித்து கப்பல்களில் சென்றவர்களில் பணயக் கைதிகளாக்கியது.
இஸ்ரேலின் கடற்படை இடைமறிக்கும் என்ற பதட்டநிலை இருந்த நிலையிலும் கூட, இப்பயணம் இஸ்ரேலின் தடையை உடைக்கும் அமைதி முயற்சியாகக் கருதப்பட்டது.
"குளோபல் சுமூத் புளோட்டிலா" (Global Sumud Flotilla) என்ற சர்வதேச கப்பல் பிரச்சாரத்தில் இலங்கை சார்பாக ஸமீரா மெஹபூப்தீன் இணைந்து கொண்டார்.
துணிச்சலான செயற்பாட்டாளராக கருதப்பட்ட, மாவனல்லையைச் சேர்ந்த ஸமீரா மெஹபூப்தீன் அவர்களுக்கு கடந்த ஏப்ரல் 19 அன்று கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்தில் பிரார்த்தனை மற்றும் ஒற்றுமை நிகழ்வு நடாத்தப்பட்டு, வழியனுப்பி வைக்கப்பட்டது! இது பற்றி 'வேட்டை' விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்ததை, வாசகர்களுக்கு நினைவூட்டுகின்றோம்.
உலகின் ஒரு மூலையில் பிறந்தாலும்,அநீதியைக் கண்டால் மனசாட்சி தூங்குவதில்லை!

சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தால் கடத்தப்பட்ட குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலாவின் செயற்பாட்டாளரான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட, ஸ்பெயின் நாட்டின் சைஃப்
அபு கெஷேக் மற்றும் பிரேசிலிலைச் சேர்ந்த தியாகோ டி அவிலா போன்றர் உட்பட பலரும் அநியாயமாகக் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலியப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையரான ஸமீரா மெஹ்புப்தீன் மே, 21ம் திகதி அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பாலஸ்தீனத்திற்கான இலங்கைத் தூதுவர் பௌசர் பாரூக், உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக கிடைத்துள்ள தகவல் மகிழ்ச்சியைத் தருகின்றது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு இஸ்ரேலிய அரசுடன் மேற்கொண்ட தீவிர ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்த அவசர விடுதலை சாத்தியமாகியுள்ளதாகவும், இவர் துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் இஸ்தான்புல்லுக்கு சென்று அங்கிருந்து மிக விரைவில் இலங்கை திரும்பவுள்ளதாகவும் மேலும் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸமீராவின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் என்பவற்றை உறுதிப்படுத்த இலங்கை அரசு செயல்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் உறுதியளிக்கப்பட்ட நிலையில், இவரை விடுவிப்பதற்காக பிரார்த்தனை செய்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்!
ஸமீராவின் இந்த மனிதாபிமானப் பயணம் மற்றும் போராட்டம் வெற்றி பெறவும், அவர் பாதுகாப்புடன் தாய்நாடு திரும்பவும் வாழ்த்துவோம்!
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments