Ticker

6/recent/ticker-posts

தாகத்தின் கொடூரம்: சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பரிதாப பலி


நைஜரின் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த இதயத்தை உலுக்கும் சம்பவத்தில், டிரக் ஒன்று நடுவழியில் செயலிழந்ததால் குடிநீரின்றி தவித்த 49 பேர் தாகத்தால் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் மாலியிலிருந்து இஸ்லாமியப் பெருநாளைக் கொண்டாட தாயகம் திரும்பிக் கொண்டிருந்த பயணிகள் என்று அகாடெஸ் ஆளுநர் அலுவலகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. பயணத்தின் போது வாகனம் பழுதடைந்ததோடு, அவர்களிடம் இருந்த குடிநீர் கையிருப்பும் முழுமையாக தீர்ந்துவிட்டது.

நைஜர் – அல்ஜீரியா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அசமாக்காவுக்கு மேற்கே 80 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள வெறிச்சோடிய பாலைவனப் பகுதியில் அவர்கள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

கொடூர வெப்பம், துளி நீரின்றி தவிப்பு, வாகனத்தைச் சீரமைக்க முடியாத அவலம் ஆகியவை இணைந்து இந்த பெரும் சோகத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குழுவில் இருந்த இருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் 50 கிலோமீட்டருக்கும் மேலாக நடந்து சென்று தண்ணீர் தேடி, பின்னர் அசமாக்கா பகுதியை அடைந்து அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைவரும் ஒரே பொதுக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஹாரா பாலைவனத்தின் இந்தப் பகுதி, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி பயணிக்கும் புலம்பெயர்ந்தோரின் முக்கிய வழித்தடமாகக் கருதப்படுகிறது. கடுமையான வெப்பம், நீர் பற்றாக்குறை, மனிதாபிமான நெருக்கடி காரணமாக ஆண்டுதோறும் பல உயிர்கள் இப்பகுதியில் பலியாகி வருகின்றன.

nambikkai


 


Post a Comment

0 Comments