Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவி கொடுக்க தகுதியற்றவர்கள் என்பது மனப்பூர்வமான உண்மை


கடந்த கால தேர்தல்களின் போது முழு நாட்டு மக்களுக்கும் பழைய அரசியலில் இருந்த வெறுப்பு,  அவநம்பிக்கை,  காரணமாகவே அனுரகுமார திசாநாயக்க அவர்கள் இலங்கையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றார்.  

இந்த வெற்றியானது, அனுரா குமார திசாநாயக அவர்களின் தனிப்பட்ட வெற்றியே அன்றி, NPP கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களின் சேவை, திறமை, மற்றும் நம்பிக்கை அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்ட வெற்றி அல்ல. அவ்வாறான ஒரு வெற்றியை அளவீடு செய்வதற்கு NNP அரசு இதற்கு முன் ஆட்சி அதிகார பதவியில் இருக்கவும்மில்லை.

இந்த அடிப்படையில் சுனாமி பேரலையில் அடிபட்டு வந்த வெள்ளம் போல, மக்கள் வாரி போட்ட வாக்குகளால் 159 ஆசனங்களை NPP அரசு பெற்றது. 

இந்த வெற்றியானது NPP கட்சியின் வெற்றி என்பதை விட,  அனரகுமார திசாநாயக்க எனும் தனி மனிதனின் வெற்றியே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அந்த வகையில்,  பெற்ற அந்த வெற்றியின் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் பாதுகாத்துக் கொள்ள ஜனாதிபதியும், அவரையும் நெருங்கிய சில முக்கிய அமைச்சர்களும் அயராது உழைத்து வருகின்றனர்.
இது வரவேற்கத்தக்கது.

ஆனால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள்  தேவைகள், அபிலாசைகளை முன்னெடுத்துச் செல்ல,  முஸ்லிம்களால் தெரிவு செய்யப்பட்ட  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் விரல்  விட்டு எண்னக்கூடிய  ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவரும் கையாலாகாதவர்கள் என்பதே உண்மையே.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  அமைச்சர் பதவி வழங்கும் அளவுக்கு தகுதியற்றவர்கள்  என,
அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் தெரிவித்த கருத்தை அப்போது முஸ்லிம் சமூகம் சரி காணாமல் இருந்தாலும், தற்போது அந்த வார்த்தையையும், அவர் கூறியதையும்  மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதற்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய  அவர்களே தான்  காரணம்.

நாம் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாக முஸ்லிம் சமூகத்தால் ஏன் தெரிவு செய்யப்பட்டோம் என்பதைகூட அறியாத பாராளுமன்ற உறுப்பினர்களாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுவது மிகவும் கவலை அளிக்கிறது.

ஆரம்ப காலத்தில் இருந்து முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எடுத்து நோக்கும்போது, வரலாற்றிலே மிகக் கேடுகட்ட ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவமே தற்போது காணக் கிடைக்கின்றது. இதை கண்கூடாக நிரூபிக்கும்  உரைகளை தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் பஸ்மின் ஹாஜியார் நடத்தி வருகிறார்.
அடுத்ததாக தொடரும் அல்குர்ஆன் சம்பந்தமான பிரச்சனை, தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக அடையாளம் காணக் கூடியதாக உள்ளது.

எட்டு முஸ்லிம் துரோகிகள் முஸ்லிம் சமூகத்துக்கு இழைத்த வரலாற்று துரோகத்தையும், அது சம்பந்தமாக அவர்களை கண்டிக்கவும் தட்டிக் கேட்கவும் நாதியற்றவர்களாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.

எந்தவித சட்ட அதிகாரமற்ற எட்டு துரோகிகளின் முன் கைகட்டி நிற்கும் பரிதாப நிலையை காணும் போது, இவர்களை முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தமைக்கு எமது பாதாணிகளை கழட்டி எம் கன்னத்தில் அறைந்து  கொள்வதைத்  தவிர வேறு வழி தோன்றவில்லை.

இலங்கை அரசியல் யாப்பின் படி பூரண மத சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தும், அதாவது ஒரு நெருப்பு வணங்கியாக இருந்தாலும் அவரது கொள்கையை அவருக்கு பின்பற்ற பூரண சுதந்திரம் உள்ள இந்த நாட்டில், எக்காரணங்களும் இன்றி, எந்த சட்ட அதிகாரங்களும் இன்றி, எட்டு துரோகிகளால் தடை செய்யப்பட்டிருக்கும் அல்லாஹ்வின் கலாமை ஜனாதிபதியையோ உரியவர்களையோ அணுகி,தைரியமாக இதை எடுத்துக் கூறி ஒரு கையொப்பத்தில் இதை வெளியே எடுக்க முடிந்த நிலையில், இடுப்பில் சீவனற்ற மனிதப் பின்டங்களாக இவர்கள் காணப்படுவது இலங்கை வரலாற்றில் முஸ்லிம் சமூகம் கண்ட மிகப்பெரும் தோல்வியாகும்.

புனித அல்குர்ஆனைப் படித்து தவறாக விளங்கிய மாற்றுமத சகோதரர்களின் வரலாறு   இலங்கை  இதுவரையில் இல்லை. குர்ஆனில் ஜிஹாத்தை பற்றி சொல்லப்பட்டுள்ளது, அல்குர்ஆனில் பயங்கரவாதம் உள்ளது என இலங்கை வரலாற்றில் எந்த மாற்று மத சகோதரர்களோ எந்த கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவோ அல்குர்ஆனுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ இல்லை. 
இது குர்ஆனை தடை செய்ய எட்டு துரோகிகளால் புனித அல்குர்ஆனின் மீது சுமத்தப்பட்ட,  வானம்  பூமி தாங்காத ஒரு அவதூராகும்.

இதை சிந்தித்து அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறி பிரச்சினையை தீர்க்கும் அளவிற்கு உங்கள் சிந்தனைகளில் மந்த புத்தியாளர்களாக இருப்பது எமது துரதிஷ்டவசமே.

குண்டு தாக்குதலுக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வெட்ட வெளிச்சத்துக்கு வந்த போதிலும், இதன் பின்னணியில் ஒரு அரசியல் சதி காணப்பட்டதை உலகமே அறிந்த நிலையில்,  குர்ஆனையோ, இஸ்லாமிய புத்தகங்களயோ, இமாம்களின் புத்தகங்களையோ  படித்து ஸஹ்ரான் குழுவினர் குண்டு வைக்கவில்லை என்பதை உலகம் ஏற்றுக் கொண்ட போதிலும், இந்த உண்மையை எடுத்துக் கூறி,உலகம் வியக்கும், முஸ்லிம்கள் உயிரை விட மேலாக மதிக்கும், எமது வணக்கங்களில் ஒரு பகுதியான அல்குர்ஆனை வெளியே எடுக்க முடியாத அளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற பெயரில்,  வெட்டவெரும் பிணங்களாக இவர்கள் காணப்படுவதானது,  இம்முறை தேர்தலில் முஸ்லிம் சமூகம் இவர்களை பாரளுமன்ற உறுப்பினர்களாக நியமித்து முஸ்லிம் சமூகம் செய்து கொண்ட அரசியல் தற்கொலையாகும்.

மேலும், அண்மையில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் தாதியர்களின் நிலைமை,

இனி இந்த நாட்டில் இனவாதம் இல்லை, இனவாதத்தை தலை தூக்க விடமாட்டோம் என, ஜனாதிபதியும், ஒட்டுமொத்த அரசாங்கமும் உறுதியாக இருக்கும் நிலையில், இலங்கையின் வரலாற்றில் மிகப் பலம் பொருந்திய அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும், உறுப்பினர்களாகவும் இருந்து கொண்டு  ஒரு சாதாரண அரச அதிகாரியின் ஆட்டத்தை அடக்க முடியவில்லை என்றால், இவர்களின் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் இவர்களுக்கு உள்ள அரச அதிகாரமும் எதற்காக ?

உண்மையில் நீங்கள் அதிகாரமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களா ?

இல்லை.

பற்கள் ஆகற்றப்பட்ட பாம்புகளா ?

தோற்றத்தில் பாம்புகளாக இருந்தாலும் உங்களின் அதிகாரமும் துணிவும் உங்களிலிருந்து பறிக்கப்பட்டுள்ளதா ? 

வெட்கத்தை விட்டு முஸ்லிம் சமூகத்திடம் சொல்லுங்கள்.

முஸ்லிம் சமூகம் என்பது இலங்கைத் திருநாட்டில் ஒரு கௌரவமிக்க சமூகம். ஆரம்பகால முதல் அவ்வப்போது நாட்டிற்கு பிரச்சினைகள் நெருக்கடிகள் வந்தபோது நாட்டை காப்பாற்றிய ஒரு சமூகம். விலை மதிக்க முடியாத கோடான கோடி சொத்துக்களை தாராள மனதுடன் இந்த மண்ணுக்காக தாரை வர்த்த ஒரு சமூகம்.

அனைத்துக்கும் முதல் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் அத்தனை பேரும் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றை முதலில் படித்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.

இந்த நாட்டின் முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் சிந்தனையில் நிறுத்தி செயல்படுங்கள்.

எட்டு துரோகிகளினால் தடை செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் பிரச்சினை முஸ்லிம் சமூகத்தை ஆழ்ந்த கவலையில் மூழ்கடிக்கும் அளவிற்கு மாற்றியுள்ளதை 
புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மனித ரூபத்தில் பிறந்த கால்நடைகளாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுவது முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட ஒரு சாபமோ எனவும் தோன்றுகிறது. 

முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை இதன் பிரகாவது சிந்தனையில் எடுத்து செயல்படுங்கள்.

இந்த நாட்டில் அடிமை வாழ்க்கை முஸ்லிம் சமூகத்திற்கு அவசியம் இல்லை. இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் உரிமையுள்ள பூர்வீக பிரஜைகள் என்பதை ஒவ்வொரு வினாடியும் உங்கள் மனதில் நிலை நிறுத்தி செயல்படுங்கள்.

பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரச்சனைகள் பற்றி பேசும்போது, எழுந்து நின்று நெஞ்சை முன் தள்ளி முதலில்  அதை சமாளிக்க முற்படுபவர் பிரதியமைச்சர் முனீர் முலப்பர் அவர்களே.

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் அல்குர்ஆன் பிரச்சினையை பாராளுமன்றத்தில் பேசிய போது,  தைரியமாக எழுந்து நின்று அதை சமாளித்தவர் கௌரவ பிரதி அமைச்சர் அவர்களேயாவார்கள்.

இம்முறை ஹஜ்ஜில் ஏற்பட்ட பிரச்சினை சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பேசும் போதும் அதை எதிர்த்து நின்றதும் பிரதி அமைச்சர் அவர்களே,

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே, அமைச்சர்களே முஸ்லிம்களின் பிரச்சனை பற்றி பேசும்போது அதை எதிர்த்து நின்று பேசுவதற்கு உங்களை பாராளுமன்றம் அனுப்பவில்லை என்பதை மனதில் வைத்திருங்கள்.

கடந்து வந்த அரசாங்கங்களின் போது, முஸ்லிம்களுக்கு பிரச்சனை ஏற்பட்ட போது,  பாராளுமன்ற உறுப்பினர்கள் துணிந்து நின்று கதைத்ததை மீட்டிப் பாருங்கள்.

அவர்களிடமிருந்து பாடம் கற்று முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அணுகுங்கள்.

இந்த நாட்டின், ஒரு அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்பார்ப்பது என்னவென்பதை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆகுவதற்கு முன் நீங்கள் 
முதலில் தெரிந்து கொள்ளுங்கள். 

அதைப் பாடமாக எடுத்து வரக்கூடிய தேர்தல் களில் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக்கொள்ள இன்றே ஒரு உறுதி பூனுங்கள். இல்லையெனில் இந்த முஸ்லிம் சமூகம் உங்களை தூக்கி எறியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் எதிர்பார்ப்பதும், அவர்களின் அபிலாஷயும் ஒரு சில விடயங்களை மாத்திரமே.
தங்களின் மத கலாச்சார உடைய அணிந்து, தங்கள் தொழில்களை நிம்மதியாக செய்து கொண்டு, தங்களது மார்க்கத்தின் அமல் இபாதத்துகளை நிம்மதியாக நடத்திச் செல்லும் ஒரு வாழ்க்கையையே இந்த நாட்டு முஸ்லிம்கள் எதிர் பார்க்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்வதோடு, அரசாங்கத்திற்கும் இத்தகவலை எடுத்துச் சொல்லுங்கள்.

இதைத் தவிர இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் ஒரு அரசாங்கத்தில் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது.

இந்த முஸ்லிம் உரிமைகளில் கை வைத்த காரணத்தினாலே உலகத்திலேயே யாராலும் வெல்ல முடியாது என உலகமே எடை போட்ட,  LTTE பயங்கரவாதத்தை துடைத்தெறிந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்து கீழே இறக்கப்பட்டார்.

முஸ்லிம்களின் உரிமைகளில் கை வைத்ததனாலே கொடுங்கோலன் கோட்டா நாட்டை விட்டு விரட்டப்பட்டான்.

இலங்கையின் கடந்து வந்த அரசியல் வரலாற்றை பாடமாக ஏற்று செயல்படுங்கள். 

இன்று நீங்கள் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரச்சினைகளை பேசும்போது எழுந்து நின்று சமாளிப்பதானது, ஊழலற்ற, இனவாதமற்ற அரசாங்கத்தை குழி தோன்டிப் புதைக்க உங்களை அறியாமலே  நீங்கள் செய்யும் மறைமுகமான சதி என்பதையும் நினைவு கொள்ளத் தவறாதீர்கள்.

உங்களின் இவ்வாறான செயல்பாடானது தற்போது முஸ்லிம் சமூகத்தில் அரசாங்கத்தின் மீதான ஒரு வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைசுப் பதவிகளை வழங்க தகுதியற்றவர்கள் என அரச தரப்புக்கு கூறியிருந்தாலும்,
இன்று அவர்கள் கூறியயதை முஸ்லிம் சமூகம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

தற்போது பதவியில் இருக்கும் அரசாங்கம், இலங்கையில் வரலாற்றில் வந்த அரசாங்கங்களில் மிகச்சிறந்த அரசாங்கமாகும். 

உங்கள் செயல்பாடுகளினாலேயே முஸ்லிம் சமூகம் இந்த அரசாங்கத்தை வெறுக்கும் நிலைக்கு தள்ளுகின்றீர்கள் என்பதை சிந்தித்து செயல்படுங்கள்.

பேருவளை ஹில்மி


 


Post a Comment

0 Comments