
கொலை குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதை தடுத்து உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அசல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று (04) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டுப் பயணத் தடையை குடிவரவு குடியகல்வுக்கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், பிரேமலால ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்ற உத்தரவு மூலம் அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட பிரேமலால ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
குறித்த மரண தண்டனைக்கு எதிராக பிரேமலால ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர்களை விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்த முடிவு சட்டத்திற்கு முரணானது என்றும், அதை செல்லுபடியற்றதாக்கி தண்டனை வழங்குமாறு கோரியும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்த மேன்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments