வத்தேகெதரையின் பாடசாலைக் கல்வி வரலாறு 1960ம் ஆண்டுகளைத் தொடந்துள்ள காலங்களிலிருந்து ஆரம்பமாகின்றது. குடியிருப்பில் பாடசாலை ஆரம்பிக்கப்படுவதற்கு முதலில் அதிகமான மாணவர்கள் உடத்தலவின்னைப் பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்திருக்கின்றனர். வத்தேகெதரைப் பாடசாலை அக்காலை குண்டசாலைத் தொகுதிப் பாராளுமன்ற அங்கத்தவராக விளங்கிய யூ. பீ. வை. ஜினதாச அவர்களால் 1960 ஜூன் 12ம் திகதி ஜாமிஆ மஸ்ஜிதின் தாழ்வாரத்தில் 37 மாணவர்களுடன் துவக்கிவைக்கப்பட்டுள்ளது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்டவேளை, குடியிருப்பைச் சேர்ந்த ஜனாப்களான ஏ. ஆர். எம். முஹ்சின், ஏ. ஸி. எம். இஸ்மாயில், ஏ. எச். அபூஸாலி ஆகியோர் தொண்டர் ஆசிரியர்களாகப் பணிபுரிந்ததன் பின் மூவரும் பல்வேறு பகுதிகளுக்கு அரசாங்க ஆசிரியர்களாகப் பதவியேற்றுச் செல்ல நேர்ந்ததால், பாடசாலை நடவடிக்கைகள் நாளடைவில் செயலிழந்து போகலாயிற்று. பாடசாலை இல்லாத குறையை உணர்ந்த ஊர்க்கனவான்கள் பலாரின் முயற்சியின் பலனாக மீண்டும் அப்பாடசாலை 1970ம் ஆண்டு மே. 31ம் திகதி அரசாங்கப் பாடசாலையாக அங்கீகரிக்கப்பட்டு, கனவான் எம். எம். ஹனிபா அவர்களது வீட்டு முற்றத்தில் ஓலைக் கொட்டிலில் 75 மாணவர்களுடன் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையை அங்குரார்ப்பணம் செய்து வைத்த பெருமை அக்காலை வத்தேகமைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய பீ. பீ. ஏ வீரக்கோன் அவர்களைச் சாரும்.
பாடசாலையின் முதலாவது அதிபராகக் கடமையேற்றவர் ஜனாப் ஏ. எல். எம். நிஸார் அவர்களாவார். நாட்செல்ல அரசாங்கத்தால் சுவீகர்க்கப்பட்ட இரண்டு ஏக்கார்நிலத்தில் பாடசாலை நிரந்தரக் கட்டிடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. அந்நிலம் கனவான் ஏ. ஐதுறூஸ் அவர்களுக்குச் சொந்தமாக விளங்கிய ‘நிதுலே முதுன்வத்த’ என்ற காணியின் ஒரு பகுதியாகும். பாடசாலைக் கட்டிடம் அமைக்கப்படுவதற்குக் காரணமாக விளங்கியவர் வத்தேகமைத் தொகுதிப் பாராளுமன்ற அங்கத்தவர் திருவாளர் ஏ. ஜீ. பெர்ணாண்டோ அவர்களாவர். அக்கட்டடம் 1975 மே 16ம் திகதி அப்போதைய கல்வியமைச்சர் அல்ஹாஜ் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வு குடியிருப்பின் வரலாற்றில் ஒரு மைல்கல் எனக் குறிப்பிடப்படினும் மிகையாகாது. 1970ம் ஆண்டு முதல் இதுவரை ஏழு அதிபர்கள் பாடசாலையில் பணிபுரிந்ததாக ஆவணங்களிலிலிருந்து அறிய முடிகின்றது.(தொடரும்)


0 Comments