விருந்தினர்களைக் குகைக்குள் அழைத்துச் சென்று அவர்கள் தூங்குவதற்கான வசதிகளைச் செய்து கொடுத்துவிட்டு, செரோக்கி அங்கிருந்து தனது மனையை நோக்கிச் சென்றதும், மூவரும் தத்தமது துறைகளில் குகையை ஆர்வத்துடன் பரீட்சிப்பதில் ஈடுபட்டனர்.
அப்போதுதான் கல்லிடுக்கொன்றுக்குள் வைக்கப்பட்டிருந்த புராதனத் தோற்பை ஒன்று அவர்கள் கண்களில் பட்டது. அதனைத் திறந்து பார்த்தபோது அதற்குள் புராதன நூலொன்று இருப்பதை அவர்கள் கண்டார்கள். மொழியறிவில் தேர்ச்சிபெற்றிருந்த அவர்களிலொருவன் நூலின் பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் படிக்கலானான்!
ஆரம்ப முதல் நூலை வாசித்துக் கொண்டிருந்த அவன் அதில் விறுவிறுப்பான சில பல விடயங்கள் இருப்பதைக் கண்டு, தொடர்ந்து படித்தான். நேரம் செல்ல மற்றவர்கள் தூங்கிவிட்டனர். அதனை முழுவதையும் படித்து முடித்துவிட வேண்டுமென்ற நப்பாசையில் அவன் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்!
அரைவாசிக்கு மேல் படித்த அவனுக்குத் தூக்கம் வர ஆரம்பித்தது. இறுதிவரை படித்துத் தனது தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ள விரும்பாததால், நூலை எடுத்துத் தன் பைக்குள் திணித்துவிட்டு, அதற்குள்ளிருந்த குறிப்பேடுகளையும், தாள்களையும் புராதனப் பைக்குள் சொருவி விட்டு, அதனை இருந்தது இருந்தப்படியே கல்லிடுக்குக்குள் வைத்துவிட்டுத் தூங்கப்போனான்!
அவனுக்குத் தூக்கம் வரவில்லை!
யோசித்தன்! பல கோணங்களிலும் யோசித்தான்! அப்போதுதான் அந்த நூலை முற்று முழுதாகத் தான் களவாடிக்கொள்வது தவறானது என்பதை அவனது உள்மனம் அவனுக்குணர்த்தியது!
படுக்கையை விட்டும் எழுந்தவன், தனது பைக்குள் வைத்த அந்த நூலை எடுத்து, சிவப்புக்கோட்டுக் குறிப்பிடப்பட்டிருந்த பந்திகள் சிலதைக் கொண்ட நான்கு பக்கங்கள் அடங்கப்பெற்ற இரண்டு தாள்களை மாத்திரம் சூசகமாகக்கலட்டித் தன் பைக்குள் திணித்துவிட்டு, நூலை எடுத்துச் சென்று புராதனப்பைக்குள் வைத்து, அதனை மறுபடி கல்லிடுக்கினுள் சொருவிவிட்டுப் படுக்கைக்குச் சென்றவன் அடுத்த அடுத்த நொடிகளில் தூங்கிவிட்டான்!
சூரியவொளி குகைக்குள் நுழையத் தொடங்கியதும் விழித்துக் கொண்ட அவர்கள் வெளியே வந்து குகைக்கப்பால் மேட்டிலிருந்து வடிந்து கொண்டிருந்த நீரூற்றில் பல் தேய்த்து முகம் கழுவி விட்டு பாக்கியாகவிருந்த ஒரேயொரு காலைக்கடனை மாத்திரம் நிறைவேற்றிக்கொள்வதற்கு செரோக்கியின் வரவை எதிர்பார்த்தவர்களாக, அருகிலிருந்த கற்பாறைகளில் அமர்ந்து சூரிய ஒளியை உள்வாங்கிகொண்டிருந்தனர்.
(தொடரும்)


0 Comments