திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-22

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-22


குறள் 848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.

மாப்ள... நம்ம செல்லக் கிறுக்கன் இருக்காம்லா... அவனுக்கு தானா யோசிக்க திறமையுங் கெடையாது.. அடுத்தவன் சொல்லுததை கேக்க வழக்கமுங் கெடையாது.. இந்த குணம் இருக்கே.. அது அவஞ் சீவம் போகுத வரைக்கும் அவங் கூடவே இருக்கப் போற சீக்கு மாப்ள.. 

குறள் 853
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.

மன வேறுபாடு.. இன வேறுபாடு..ல்லாம் தும்பத்தைத் தரக்கூடியது மருமவன. இப்பிடிப்பட்ட எல்லா வகை மாறுபாடுகளையும் யார் யார் தங்களது மனதிலிருந்து விலக்கி விடுகிறார்களோ, அவர்களுக்கு தவறு இல்லாத, கேடு இல்லாத புகழ் கிடைக்கும் மருமவன. 

குறள் 861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

மாப்ள.. ஒருத்தன் நம்மை விட வலிமையானவன் னா, அவங்கிட்ட மோதக்கூடாது.

அது மாதிரி தான்... ஒருத்தன் நம்மை விட வலிமை கொறஞ்சவனா இருந்தா, அவங்கிட்டயும் வம்பு இழுக்கக் கூடாது மாப்ள..

குறள் 862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் 
என்பரியும் ஏதிலான் துப்பு.

நம்ம பயா  ஒருத்தன் இருக்கான்.. பக்கத்துல இருக்கவொளோட அன்பாவே இருக்க மாட்டான். 

கூட இருக்க சேக்காளில்லாம் இருக்கானுவொள.. அவனுவ நல்ல பயந்தாங் கொள்ளி பயலுவொ. 

நம்ம பயலும் சரியான நோஞ்சாம்பயா. 
இந்த மாதிரி பயலாலெல்லாம் எப்படி எதிராளிங்களைச் சமாளிக்க முடியும்.? 

குறள் 874
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

மாப்ள... எப்பம் பாத்தாலும் கரிச்சுக் கொட்டிக்கிட்டே இருக்க வேண்டாதவொனுவொளயும், சில பேரு தோள்ல கை போட்டு வளைச்சு சேக்காளியாக்கிடுவாங்க. அப்பிடிப்பட்ட பெருந்தன்மை உள்ள பெரிய மனுசங்களை இந்த உலகம் முழுச்சூடும் பெருமையா பாக்கும் டே. 

குறள் 881
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.

மாப்ள.. நிழல்ல நிய்க்கிறது இனிமையா இருக்கும். அதைப் போல தண்ணீர் சுவையாக இருக்கும். இந்த ரெண்டுமே நமக்கு தீங்கு செய்யுமின்னா அதையும் கெட்டதாகத் தான் கருதணும். இது மாதிரிதாம் மாப்ள.. நம்ம உறவுகள் நண்பர்கள் கூடவே இருந்து நல்ல பழகிட்டு நமக்கே குழி பறிச்சாங்கன்னா, அதுவும் பெருந் தும்பந்தான் மாப்ள. (தொடரும்)


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post