புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 94

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 94


“இர்வினுக்குத் தூக்கம் வர மறுத்தது. கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தான். மொத்தமாக அவனது நினைவில் அந்தக் குள்ள மனிதர்களும், அவர்கள் செரோக்கிக்கு கொடுத்துச் சென்ற நாணயத்தாள்களுமே  நிலைத்து நின்றன.

பணப்புழக்கமே இல்லாத வனவாசிக்கு அவர்கள் ஏன் நாணயத்தாள்கள் கொடுக்க வேண்டும்? அதற்கீடாக செரோக்கியிடமிருந்து அவர்கள் எதனைப் பெற்றுக் கொண்டார்கள்?

இவ்வாறான கேள்விகளே அவனது மனதை வருடிக் கொண்டிருக்க, நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு அவன் தூங்கி விட்டான்.  வழமைக்கு மாறாக விடிந்ததும் விடியாததுமாகக் காலையில் எழுந்து கொண்டவன்,  விருவிரென்று  காலைக் கடன்களை முடித்துக் கொண்டவன், தாயார் ஊற்றி வைத்திருந்த “கபச்சோனா”வை மட மடவென்று குடித்துமுடித்துவிட்டு, வீட்டுக்கு வெளியே வந்தவன் தனது பைக்கை ஒரு மிதி மிதித்தான்!

இர்வினின் பைக்  “மனாஸ்” வீதியில் வெகு வேகமாகச் சென்று புரோகோனிஷ் எல்லையிலிருந்த மைதானத்தை அடைந்தது. பைக்கை அங்கே நிறுத்தி வைத்துவிட்டு, அவன் மரவேரடியைத் தாண்டி, செரோக்கியின் ஜாகை நோக்கி நடக்கலானான்.

செரோக்கியின் வீடு, அவனது பெற்றோரின் ஜாகை, பெரியவர் வாழ்ந்த அந்தக் குகை மட்டுமல்லாது சுற்று வட்டாரமே எந்த மனித நடமாட்டமுமின்றி வெறிச்சோடிக்கிடந்தன.

வழமைபோல் குகைக்குள் சென்றவன்  தனது நகரத்து உடைகளைக் கலைந்துவிட்டு, கல்லிடுக்குக்குள்  சொருகி வைத்திருந்த  கானகத்து உடைகளை எடுக்க முனைந்தபோது, அந்தப் புராதனப்பை கீழே  விழுந்தது.

சென்ற முறை அவன் வந்தபோது நூலொன்றும் சில காகிதாதிகளும் மட்டுமே பைக்குள் இருந்ததால், பாரமில்லாதிருந்த பை, இப்போது  பாரிப்பதற்குக் காரணம் என்னவாயிருக்குமென்று தனக்குள்ளேயே  கேள்வி எழுப்பிக்கொண்ட அவன் அந்தப் புராதனப்பையை மெல்லத் திறக்கலானான்!
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

Previous Post Next Post