குகைக்குள் இலேசாக வெளிச்சம் வர ஆரம்பித்தது… உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கூடாகத் தெரிந்த ஒளிக்கதிர்கள் இர்வினின் கண்களைக் கூசவைத்தன!
இர்வின் விரிப்பிலிருந்து மெல்ல எழுந்தான். சற்றுத் தூரத்தில் கற்குகைக்கருகே மலைச் சரிவிலிருந்து பளிங்கெனப் பாய்ந்து வந்து, தரை தொட்ட நீரூற்றில் முகத்தை நனைத்துக் கொண்டு, கற்பாறையில் சாவகமாக அமர்ந்தபோது செரோக்கியின் தாயார் கஞ்சிச்சிரட்டையை ஏந்திவந்து அவனருகே நின்றாள்!
அந்த மூலிகைக் கஞ்சினை தன் இரு கரங்களாலும் மரியாதையுடன் வாங்கிக் கொண்ட இர்வின், அதனை இறுக்கிப் பிடித்தவாறு சுவைத்துக் குடிக்கத் தொடங்கியபோது... மனைக்குள் விரைந்து சென்ற செரோக்கி காகித அட்டை ஒன்றுடன் அங்கு வந்து சேர்ந்தான்!
காலியான தன் வயிற்றை மூலிகைக் கஞ்சினால் நிரப்பிக்கொண்ட இர்வின் சிரட்டையைத் தரைதாங்க வைத்துவிட்டு, செரோக்கி தந்த அந்தக் காகித அட்டையை எடுத்துப் பார்த்தபொது அவனது கண்கள் அகல விரிந்தன!
நவீன “பொலோரைட்” கெமராவினால் எடுக்கப்பட்ட நிழற்படம் அது. அதிலே ரெங்க்மாவும் செரோக்கியும் நடுவில் நின்றிருக்க, அவர்களுக்கு இரு மருங்கிலும் அந்தக்குள்ளர்கள் நின்றிருந்தனர்!
‘இப்போதைக்கு இந்த போதும் அந்தக் குள்ளர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள், அத்துனை பணத்தொகையை அவர்கள் ஏன் செரோக்கியிடம் கொடுத்துச் சென்றார்கள் என்பதையெல்லாம் அறிந்து கொள்வதற்கு’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டவனாக, புராதனப் பைக்குள்ளிருந்த பணக்கட்டை எடுத்து செரோக்கியின் கைகளில் திணித்துவிட்டு, “பொலோரைட்” நிழற்படத்தையும், நூலையும் பைக்குள் திணித்துக் கொண்ட இர்வின், செரோக்கியிடம் விடை பெற்றுக்கொண்டவனாக மிகவும் பரபரப்பாக மரவேரடி நோக்கி நடக்கலானான்!
மரவேரடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இருசக்கர சக்தியூர்தியில் ஏறி உதைத்தவன், கடும் வேகத்தில் மனாஸ் நகர்ந்து, தன் வீடு வந்து சேர்ந்தான்.
அமேசான் வனப்பகுதியில் “ ஒரினாகோ” நதிக்கரை வரை சென்று வந்த அவன் களைப்பினாலும், தூக்கக்கலக்கத்தினாலும் தன்னறையில் நுழைந்து அயர்ந்து தூங்கிவிட்டான்.
(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
தொடர்கதை