காலைப்பொழுதில் கவிதை எழுத பட்டபாடு!

காலைப்பொழுதில் கவிதை எழுத பட்டபாடு!


கவிதை எழுத காலைப் பொழுதில்
அவசர மாக அமர்ந்தேன் --கவிதைக்
கருப்பொருளைச் சிந்தித்துக் காத்திருந்தேன்!
சுரந்தது சோதனைதான் சூழ்ந்து.

அழைப்பு மணியை அடித்தார் ஒருவர்!
விழைவுடன் சென்றே வினவ -- வளமான
கீரை கொணர்ந்துள்ளேன்!  கேளுங்கள் அம்மாவை!
பார்த்தேன்!முறைத்தேன்!பணிந்து.

அரைக்கீரை வாங்கியதும் அன்புடனே சென்றாள்!
பரபரப்பாய் உட்கார்ந்து பார்த்தேன் -- அரைநொடியில்
"அம்மா" குரல்கேட்டேன்! அங்கே சலவையாளர்
நின்றார் துணியுடனே பார்த்து.

துணிவாங்கி வைத்துவிட்டு துள்ளித்தான் வந்தேன்!
மணியடித்த சத்தத்தால் வாசல் -- தனையளந்தேன்
தண்ணீரை விற்பவரோ தானே சிரித்திருந்தார்!
வெந்நீராய்க் கொந்தளித்தேன் வெந்து.

தண்ணீரைத் தந்தவரும் தன்வழியே சென்றுவிட்டார்!
இன்னுமென்ன என்றே எழுதவந்தேன் -- அங்கேயோ
வாசலிலே பால்காரர் வந்தே மணியடித்தார்!
காசெடுக்கச் சென்றேன் கடிந்து.

அடுத்தடுத்து இவ்வாறு அன்பாகத் தொல்லை
படையெடுக்கும் காலைநேரம் பாவம் -- உடைப்பெடுத்தா
ஓடும் கவிதைகள்? உள்ளம் கலங்கிடவே
மூடினேன் பேனாவை!மூச்.


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post