முத்தமிழறிஞர் கலைஞர் 99வது பிறந்தநாள் வாழ்த்து!

முத்தமிழறிஞர் கலைஞர் 99வது பிறந்தநாள் வாழ்த்து!

 

முக்காலமும் உணர்ந்த
முத்தமிழ் அறிஞரே!
எக்காலமும் எமக்கு
ஏற்றம் கிட்டிடவே
தொலைநோக்குத் திட்டங்கள்
தொய்வின்றித் தந்து
முன்னேற்றம் ஈந்த
முன்னேற்றக் கழகத்தின்
முதுபெரும் தலைவனே!
முத்துவேல் மைந்தனே!
 
அண்ணாவின் இதயத்தை
இரவல் வாங்கிவந்து
அண்ணனின் நீட்சியாக
ஆண்டாய் தமிழகத்தை!
வள்ளுவனின் குறளுக்கு
வளமான உரையளித்தாய்!
வள்ளுவத்தை உரமாக
வித்திட்டாய் ஆட்சிக்கு!
வித்திட்ட திட்டங்கள்
விளைந்தன விருட்சமாய்!
சிற்பியாய் இருந்து
செதுக்கினாய் தமிழ்நிலத்தை!
 
இயற்கைக்கு முரணாக
இருக்க இயலாதென்று
கொடைஒன்றைக் கொடையாக
கொடுத்துச் சென்றாயே!
பறம்பின் பாரியாய்!
இருளகற்றும் செங்கதிராய்!
செயற்கரிய செயலைச்
செவ்வனே செய்யும்
செயல்திறன் கொண்ட
செயலறிஞர் ஸ்டாலினை!

பகுத்தறிவுப் பகலவனின்
பகுத்தறிவுக் கொள்கைகளை
பேரறிஞர் அண்ணாவின்
பேராற்றல் பண்புகளை
தடம்போட்டுத் தந்த
தந்தையின் பாதையில்
புடம்போட்ட தங்கமாய்
தனயனின் நல்லாட்சி!
 
தீயவர் தீண்டிடாமல்
திராவிட அரணாய்நின்று
திராவிடமாடல் கொண்டு
தீவிர உழைப்பைக்கொண்டு
எல்லாமும் எல்லோர்க்குமென்று
எளியோர் ஏற்றம்பெற
பொற்கால ஆட்சிநல்கும்
நற்காலம் தொடரவேண்டும்!
செய்ந்நன்றி மறந்திடாமல்
செயலறிஞர் ஸ்டாலின்
வழிநின்று விழியாக
மொழி காக்கவேண்டும்!
கரம்பற்றி அரணாக
காப்போம் தமிழ்நிலத்தை!
வாழ்க கலைஞர்!  வளர்க கலைஞர் புகழ்!
 
  
x

Post a Comment

Previous Post Next Post